சனி, 20 மார்ச், 2010

விடுதலைப்புலிகள் கேட்டதை தற்போது தமிழ் கட்சிகள் கேட்கமுடியாது


ராஜபக்ச

செய்திகள்எதிர்காலத்தில் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்ள நான் உத்தேசித்துள்ளேன். அப்போது அவர்கள் விடுதலைப்புலிகள் கேட்டதை எல்லாம் கேட்க முடியாது. வடக்குக் கிழக்கை நான் ஒருபோதும் இணைக்கப்போவதில்லை. மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்குவது ஆபத்தானது என சிறிலங்கா அரசதலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சிங்கப்பூரின் ‘ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கியுள்ள நீண்ட பேட்டியில் மேற்கண்டவற்றைத் தெரிவித்திருக்கின்றார்.


“ஸ்ரெய்ட் ரைம்ஸ்’ பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

கேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்களது கட்சிக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? மூன்றில் இரண்டு பெரும்பான்மை சாத்தியமா?

பதில்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நான் பதற்றமற்ற நிலையில் உள்ளேன். மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது எனக்கு முக்கியமான விடயமல்ல.

ஏனென்றால், நான் அரசதலைவராகத் தெரிவு செய்யப்பட்ட வேளை என்னிடம் பெரும்பான்மை இருக்கவில்லை. நாடாளுமன்ற சபாநாயகரை எதிர்க்கட்சியினரே நியமித்தனர்.

நான்கு வருடங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தை நான் கலைத்த வேளை, சபாநாயகர் உட்பட 47 புதியவர்கள் எனது கட்சியில் இருந்தனர். எனக்கு பெரும்பான்மையும் இருந்தது.

ஆகவே, நான் எண்ணிக்கை குறித்து கவலையடையவில்லை. நாங்கள் சிறந்த வெற்றியைப் பெறுவோம். எனினும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது அரசமைப்பை மாற்றுவதற்கு உதவும்.

இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகள் எனக்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை.

கேள்வி: விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இன்னமும் செயற்படுகிறார்களா?

பதில்: இலங்கைக்குள் செயற்படுவதை விட, அதற்கு வெளியேதான் அதிகளவிற்கு செயற்படுகின்றனர்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தை வைத்தே வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்களுக்கென நிகழ்ச்சி நிரல் உள்ளது. அவர்கள் இதில் வாழ்கின்றனர்.

கடந்த காலம் போன்று தமிழர்கள் தற்போது நிதி வழங்க முன்வராததால் விடுதலைப்புலிகளுக்காக வெளிநாடுகளில் நிதி திரட்டியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களைப் பொறுத்தவரை இங்கே ஏதாவது நடக்க வேண்டும்.

கேள்வி: நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் முறை குறித்து என்ன சொல்கிறீர்கள்? அதன் அதிகாரங்களைக் குறைப்பீர்களா?

பதில்: இதனை நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். நாடாளுமன்றம் இவ்வாறான விடயங்களை கடந்த காலங்களில் கையாண்டுள்ளது. ஆகவே, நாடாளுமன்றமே இதனைத் தீர்மானிக்கட்டும்.

கேள்வி: நாடாளுமன்றம் நீங்கள் சொல்வதைத் தானே செய்யும்?

பதில்: எனக்குத் தெரியும். அவ்வாறே கருதுகிறேன். என்றாலும், சில மாற்றங்கள் நிகழவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்கும் கடப்பாடுடைய அரசதலைவர் முறையை நான் விரும்புவேன். அல்லது இவை அனைத்தையும் விட்டுவிட்டு நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்கும் பிரதமரையும் விரும்புவேன். அல்லது ஓய்வுபெற்று சிங்கப்பூரின் லீகுவான் யூ போன்று அரசிற்கு ஆலோசனை வழங்க விரும்புவேன்.

ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் முறையில்லாவிட்டால் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்க முடியாது.

கேள்வி: பூரண நல்லிணக்கத் திட்டம் குறித்து எழுதியிருந்தீர்கள். அதன் அர்த்தம் என்ன?

பதில்: இதனையே நான் நம்புகிறேன். சமாதானம் இல்லாமல் அபிவிருத்தி இல்லை. இதேபோன்று அபிவிருத்தி இல்லாமல் சமாதானம் இல்லை.

கிராமமொன்றிற்கோ அல்லது நலன்புரி முகாமிற்கோ சென்று உங்களுக்கு அரசமைப்பு மாற்றம் வேண்டுமா எனக் கேளுங்கள். எங்களுக்கு இருப்பதற்கு வீடு வேண்டும், எனது குழந்தைக்கு கல்வி வேண்டும் என்ற பதிலே வரும்.

இந்தப் பகுதிகளை அபிவிருத்தி செய்தால் புதிய நடைமுறையும், புதிய அரசியல்வாதிகளும் உருவாகலாம்.

இதற்காகவே நான் தேர்தலை நடத்தினேன். வடபகுதி மக்கள் எனக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தும் தேர்தலை நடத்தினேன். என்றாலும் எனக்குக் கிடைத்த வாக்குகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

கேள்வி: தீர்வு என்ற வகையில் சமஷ்டி கொள்கை தகுதிவாய்ந்தது இல்லையா? இந்தியா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் இது பலனளித்துள்ளதே?

பதில்: சமஷ்டி என்பது இலங்கையைப் பொறுத்தவரை மிகக் கேவலமான வார்த்தை. அது பிரிவினையுடன் தொடர்புபட்டுள்ளது. அரசியலிலிருந்து ஓய்வு பெற அல்லது விலகத் தீர்மானித்தால் சமஷ்டி பற்றிப் பேசுவதே சிறந்த வழி, அதற்குப் பின்னர் அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நான் ஓர் அரசியல்வாதியல்லவா? உண்மையான நிலைவரம் என்னவென்றால், இது இந்தியா போன்று பாரிய நாடல்ல. இலங்கையின் வரலாற்றை மறக்க முடியாது.

தற்போது அனைத்து முதலமைச்சர்களும் எனது கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை என்னால் கட்டுப்படுத்த முடிகின்றது.

என்றாலும், அவர்களுக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்புச்சபைக் கூட்டத்தைக் கூட்டுகின்றனர். அவர்களுக்கு மேலும் அதிகாரத்தை வழங்கினால் தாங்கள் நினைத்ததை எல்லாம் செய்வார்கள்.

இந்தியத் தமிழர்கள் தமது பகுதிக்கு வரமுடியாது என அவர்கள் தெரிவிக்கவும் கூடும்.

கேள்வி: அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து என்ன கருதுகிறீர்கள்? குறிப்பாகப் பொலிஸ் மற்றும் காணி மீதான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்குவது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

பதில்: இதுகுறித்து நாங்கள் ஆராய வேண்டும். 13 ஆவது திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

பொலிஸ் அதிகாரத்தைத் தவிர, ஏனையவற்றை மாகாணசபைகளுக்கு வழங்கிவிட்டோம். நிலங்கள் தொடர்பாகச் செய்வதற்கு எதுவுமில்லை.

வடக்கில் மாகாணசபை இல்லாத போது என்னால் என்ன செய்யமுடியும்? எவ்வாறெனினும், மத்திய அரசின் கட்டுப்பாடும் இருக்கவேண்டும்.

நீர்ப்பாசனக் குளங்களைத் தமது நண்பர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் சிலர் வழங்குகின்றனர். பொலிஸ் அதிகாரத்தைப் பொறுத்தவரை எனது மக்கள் இதனை வழங்கவேண்டாம் என்றே தெரிவிப்பர்.

சோனியா காந்தி உத்தரப்பிரதேசத்திற்குச் சென்றவேளை, என்ன நடைபெற்றது என்பதைப் பாருங்கள். அவரது தொகுதிக்குள் அவரை நுழைவதற்கு அந்த மாநில முதலமைச்சர் அனுமதி வழங்க மறுத்தார்.

அவர்கள் பொலிஸின் கட்டுப்பாட்டிற்காக அடிபணிகின்றனர்.

இந்தியாவிடமிருந்து பாடம் கற்றுள்ளேன்

நான் இந்தியாவிடமிருந்து பாடம் கற்றுள்ளேன். இதே தவறை நான் செய்வேன் எனக் கருதுகிறீர்களா?

கேள்வி: விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறுவீர்களா?

பதில்: இல்லை. செயற்படாமல் இருக்கும் உறுப்பினர்கள் உள்ளனர். குறிப்பாக இலங்கைக்கு வெளியே அவர்கள் உள்ளனர். தலைமைத்துவம் அழிக்கப்பட்டதால் அனைத்தும் முடிவடைந்து விடவில்லை. யுத்தம் முடிவடைந்து ஒன்பது மாதங்களே ஆகின்றன. பயிற்றுவிக்கப்பட்ட தற்கொலைப் போராளிகள் செயற்படாமலுள்ளனர்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் தற்கொலைப் போராளிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தினர். அவர்கள் கொழும்பிலும் ஏனைய வெளிநாடுகளிலும் உள்ளனர். பலர் அவர்களைப் பயன்படுத்தலாம்.

பொன்சேகா ஒரு முட்டாள் மன்னிப்பு வழங்கு சாத்தியம் இல்லை

கேள்வி: பொன்சேகா குறித்த உங்களது உணர்வலைகள் என்ன? நீங்கள் திட்டமிட்டுள்ள தேசிய நல்லிணக்கத்தின் கீழ் அவரையும் அரவணைக்க முடியாதா?

பதில்: அவர் ஒரு முட்டாள். நவம்பர் 16ஆம் திகதி அவர் இங்கு எனக்கு முன்னால் அமர்ந்திருந்தார். அரசதலைவர்த் தேர்தலில் போட்டியிட விரும்புகிறீரா என நான் அவரைக் கேட்டேன். அவர் இல்லையென்றார்; அதுபற்றிச் சிந்திக்கவில்லை என்றார். இறுதியாக என்னைச் சந்தித்த போது கூட அவர் இதுபற்றிக் கூறவில்லை.

நான் அவரிற்கு ஆலோசனை வழங்கினேன். அரசியல், இராணுவத்திற்குரியது அல்ல என்றேன்.

இராணுவத்தில் நீங்கள் உத்தரவிட்டால் அவர்கள் பின்பற்றுவார்கள். அரசியலில் வேறு மாதிரி. உங்களை விமர்சித்தவர்களிடமே நீங்கள் செல்கிறீர்கள் என்றேன். அவர் இதுவும் அரசியல்தானே என்றார்.

நான் நீங்கள் அவதானமாக இருங்கள், அவர்கள் ஒருநாள் உங்களைக் கைவிடுவார்கள் என்றேன்.

சரத் பொன்சேகாவிற்கு மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அவர் தன்னை அரசியலுக்குத் தயார்ப்படுத்தாத முட்டாள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக