செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

பூணூல் கொழுப்பு!

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து நேற்றைய தினமணியில் (23.8.2010) அன்புள்ள ஆசிரியருக்கு பகுதியில் இது தேவையா? எனும் தலைப்பில் கீழ்க் கண்ட பெட்டிச் செய்தி ஒன்று இடம் பெற்றுள்ளது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பால் என்ன ஆகப் போகிறது? அமைச்சரவை (பிரதமர் தலைமையில்) ஜாதி வாரிக் கணக் கெடுப்புக்கு ஒப்புதல் தந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் காடுகளில் புலிகள் எத்தனை? சிங்கங்கள் எத்தனை? யானைகள் எத்தனை? எனக் கணக்கிட்ட செய்தி வெளியாகியது. நல்லவேளை நரிகள் எத்தனை? நாய்கள் எத்தனை? பூனைகள் எத்தனை? என்ற கணகெடுப்பு ஒன்றுதான் நடக்கவில்லை!

அதிகமான ஜாதிகள் உள்ளவர்கள் விகிதாசாரப்படி, முன்னுரிமை கோரி நாங்கள்தான் ஜாதியில் அதிகமாக உள்ளோம் என போராட மைனாரிட்டி ஜாதிகள், அதெல்லாம் சரியல்ல. பன்றி பல குட்டிகள் போட்டு என்ன பிரயோஜனம்? நாங்கள் ஜாதியில் குறைந்தாலும் சிங்கம் என்பார்கள்.

ஆக, இப்படி போராட்டம் பெரிதாகி வெடிக்க அதில் பலர் சாக, அதற்கு ஆதரவாக இப்போது காஷ்மீரில் நடக்கும் அராஜகம் போல் அராஜகம் வெடிக்க வருங்கால இந்தியாவுக்கு இது தேவையா?

எவன் திறமை மிக்கவனோ - அவனே உயர்ந்த ஜாதி! எவன் தேசபக்தி மிக்கவனோ அவனே பெரிய சக்தி! இறைவா! இந்தத் தலைவர்களின் பொய் முகங்களை நீதான் உலகுக்கு உணர்த்த வேண்டும்!

இதனைப் படிக்கும்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளவர்களின் மனப்பான்மை எந்த உஷ்ணத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை எளிதில் உணரலாம்.

நல்லவேளை, நரிகள் எத்தனை? நாய்கள் எத்தனை? பூனைகள் எத்தனை? என்ற கணக்கெடுப்பு ஒன்றுதான் நடக்கவில்லை என்று தனது ஆத்திரத்தின் மூலம் அவரது கீழ்மையான குரைச்சல் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நாய்கள் கணக்கை- ஜாதிவாரிக் கணக்கெடுப்போடு ஒப்பிட்டு எழுதியிருப்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும்.

மைனாரிட்டி ஜாதிகள் - பன்றி பல குட்டிகள் போட்டு என்ன பிரயோஜனம்? நாங்கள் ஜாதியில் குறைந்தாலும் சிங்கம் என்பார்கள்- என்பதன் மூலம் பெரும்பான்மை மக்கள் பன்றிக் குட்டிகளோடு ஒப்பிடப்பட்டுள்ளனர்.

அசல் ஆர்.எஸ்.எஸ். நெய்யில் பொரித்த பண்டமாக இருக்கக்கூடிய ஒருவர் ஆசிரியராக இருக்கும் இந்த ஏட்டில் இதைத்தான் எதிர்பார்க்க முடியும் என்று சமாதானம் அடைந்துவிட முடியாது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக தினமணி தனது தீய, ஆலகால நஞ்சினைக் கக்கிக் கொண்டு திரிகிறது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் வருண வெறி நாகங்களை அடையாளம் காணக் கடமைப் பட்டுள்ளனர்.

ஜாதியை ஒழித்துக் கட்டியே தீரவேண்டும் என்ற ஜாதி ஒழிப்பு ஆவேசத்தில் எழுதப்பட்ட கடிதமா இது? அல்ல, அல்ல. ஆவணி அவிட்டமாகிய இன்று பழைய அழுக்குப் பூணூலை அப்புறப்படுத்தி விட்டு, தடித்த புது முறுக்குடன் புதிய பூணூலைத் தரித்துப் பலமுறை இழுத்துவிட்டு அழகு பார்க்கும் கூட்டம்தான் இந்த வகையில் மூக்கணாங்கயிறு இல்லாத பொலி காளை போல துள்ளுகிறது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடந்தால் காஷ்மீரில் நடப்பது போல அராஜகம் வெடிக்க ஆரம்பிக்குமாம். இந்தியாவுக்கு இது தேவையா என்று மூக்கை ரத்தம் கசியக் கசிய சிந்துகிறது.

உரிமை பாதிக்கப்பட்ட மக்கள், அந்த உரிமை எந்த வகையிலாக இருந்தாலும் அதற்காகப் போர்க் கோலம் பூணத்தான் செய்வார்கள்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளைப் புரிந்துகொண்டு அதற்கான வாய்ப்புகளை சட்ட ரீதியாக அளிக்கத் தவறினால், அந்த மக்களின் குமுறல் எரிமலையாகி ஒரு நாள் வெடிக்க ஆரம்பித்தால், ஆதிக்கவாதிகளின் கதி என்னவாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் முழுமையும் உரிமையின் கூர் வாட்கள் கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, ஆதிக்க வாதிகளை எப்படியெல்லாம் சிதைத்துள்ளன என்ற வரலாறு தரும் பாடத்தைப் படித்துக் கொள்ளவில்லையானால், புத்திசாலித் தனமாக அதன் வீரிய வீச்சைப் புரிந்துகொண்டு செயல்பட முன்வரவில்லையானால் வட்டியும் முதலுமாக - அதற்கு எதிர்ப்பாக இருப்பவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று எச்சரிப்பது நமது கடமையாகும்.

இட ஒதுக்கீடு வந்தால் தகுதி, திறமை தற்கொலை செய்துகொண்டுவிடும் என்று கூறிப் பார்த்தனர்; அது எடுபடவில்லை; இட ஒதுக்கீடு அடிப்படையில் படித்துத் தேர்ந்தோர் தங்களின் திறமைகளைச் சாதனைகள் மூலமாகப் பட்டொளி வீசிப் பறக்கிறார்கள்.

கடைசியில் தங்களுக்கும் இத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தேவை என்ற மனு போடும் நிலைக்கு வந்தார்கள் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் என்பதை மறந்துவிட்டு, தினமணி தன் ஆவணி அவிட்டப் புத்தியைக் காட்டலாமா?

எவன் திறமை மிக்கவனோ, அவனே உயர்ந்தவன் - எவன் தேசபக்தி மிக்கவனோ அவனே பெரிய சக்தி என்று மகரிஷி மாதிரி உபந்நியாசம் ஒரு பக்கத்தில்.

திறமைக்கும், தேச பக்திக்கும் அளவுகோல் என்ன? மனப்பாடம் செய்து தாள்களில் வாந்தி எடுத்துப் பெறும் மதிப்பெண்கள்தானா? வகுப்பில் மக்குப் பையன் என்று கூறப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதியனவற்றைக் கண்டுபிடித்துத் தந்தவர் என்பதை யெல்லாம் தினமணிகள் வசதியாகச் சாமர்த்தியமாக மறந்து விடும்.

இறைவா! இந்தத் தலைவர்களின் பொய் முகங்களை நீதான் உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று இறுதியாக மங்கலம் பாடிக் கடிதம் முடிக்கப்பட்டுள்ளது.

இறைவனன்றிதான் ஒன்றும் அசையாதே. அப்படியானால் இப்பொழுது நடைபெற்று வரும் (ஜாதி வாரிக் கணக்கெடுப்பு உள்பட) அனைத்தும் அவனால்தான் நடைபெறகிறது என்று ஒப்புக்கொண்டு கிருஷ்ணா, ராமா என்று முணுமுணுத்து பஜனை செய்துகொண்டு கயிற்றுக் கட்டிலில் படித்துக் கிடக்க வேண்டியதுதானே! அதற்குப் பிறகு என்ன ஜாதி முறுக்கும் - பூணூல் கொழுப்பும்?
www.viduthalai.com

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!


> கழகத் தோழர் வீடு என்றால் கழகக் கொடி பறக்கவேண்டும்
> கழகத் தோழர் வீட்டில் விடுதலை கழக நூல்கள் கண்டிப்பாக இடம்பெறவேண்டும்
> தலைமைக் கழகம் முதல் கிளைக் கழகம் வரை வலைப்பின்னல் (நெட் வொர்க்) தேவை

தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை
தமிழ்நாடே திகைக்கும் வகையில் கொண்டாடுவோம்!
திருச்சி கழகச் செயல் மறவர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆற்றிய வழிகாட்டும் எழுச்சியுரை



திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற, கழகச் செயல் மறவர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டும் உரை (18.8.2010).


திருச்சி, ஆக. 19 திருச்சி பெரியார் மாளிகையில் திராவிடர் கழக மாநிலப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநில செயலாளர்கள், அமைப்பாளர்கள், மண்டல திராவிடர் கழகத் தலைவர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்களின் கலந்துறவாடல் கூட்டம் நேற்று (18.8.2010) மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

குமரிமுதல் திருத்தணிவரை உள்ள கழகப் பொறுப் பாளர்கள் திரண்டிருந்தனர். பாசறைக் கூட்டம் போல தோழர்கள் திரண்டிருந்தனர். கலந்துறவாடல் கூட்டத் திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் சிறப்பாகக் குறிப் பிட்டதாவது:

புதிய பொறுப்பாளர்களுக்கு முதலாவதாக தமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துத் தமது உரையைத் தொடங்கினார்.

(1) கழகத் தோழர்களின் சந்திப்பும், கலந்துறவாடலும் அடிக்கடி நடைபெறவேண்டும். ஒரு கருப்புச் சட்டைக்காரர் இன்னொரு கருப்புச் சட்டைக்காரரிடம் பாசம், அன்பைச் செலுத்தவேண்டும் ஒற்றுமை உணர்வு மேலோங்கிக் காணப்படவேண்டும்.

(2) தந்தை பெரியார் இயக்கத்தை யாரை நம்பி நடத்தினார்? தொண்டர்களை நம்பித்தான் நடத்தினார். மிட்டா மிராசுகளை, பெரும் பணக்காரர்களை நம்பி இயக் கத்தை நடத்தவில்லை. அத்தகையவர்களை உபயோகப் படுத்தியிருப்பார் அவ்வளவுதான்.

ஜஸ்டீஸ் கட்சி பணக்காரக் கட்சிதான். ஆனால், அவர் களால் அந்தக் கட்சியை நடத்த முடியாத நிலையில், தந்தை பெரியார் அவர்களிடம்தான் அந்தக் கட்சியை ஒப் படைத்தனர்.

(3) முன்பு எந்தக் காலகட்டத்தையும் விட இயக்கம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எடுத்துக் காட்டாக இம்மாதம் 8 ஆம் தேதி வாலாஜாவில் நடைபெற்ற மண்டல மாநாடு இளைஞர்களின் பாசறையாகக் காட்சி அளித்தது. இரண்டு நாள் பயிற்சி முகாமும் நடத்தப் பட்டது. மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட மூட நம்பிக்கை எதிர்ப்புப் பேரணி அப்பகுதி மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது என்பதில் அய்யமில்லை.

மிகச் சிறப்பாக மாநாட்டை நடத்திய தோழர்களுக்குப் பாராட்டுகளை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கி றேன்.

பெரியார் தந்த புத்தி

(4) நமக்குச் சொந்த புத்தி தேவையில்லை பெரியார் தந்த புத்தியே போதும் என்று சொல்லுவது வார்த்தை அழகுக்காக அல்ல. அது அனுபவ ரீதியானது. ஆசாபாசத்திற்கு அப்பாற்பட்டது அப்பழுக்கற்றது. இலட்சியத்துக்காக எந்த விலையையும் கொடுக்கத் தூண்டக் கூடியது இன்றைக்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்பாக தந்தை பெரியார் எழுதிய எழுத்துக்களை இன்று படித்தால்கூட மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தொலைநோக்கோடு அய்யா எடுத்துச் சொன்ன கருத்து களை நாம் பின்பற்றினாலே போதும்.

(5) நம்மை அழிக்க எதிரிகள் பல ஆயுதங்களைப் பயன்படுத்துவார்கள். துரோகிகளை உற்சாகப்படுத்து வார்கள். அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை; நமது செயல்பாடுகள்மூலம் அவற்றை எளிதில் முறியடித்துவிட முடியும்.

வலைப்பின்னல்!

(6) மாநிலம் மண்டலம் மாவட்டம் ஒன்றியம் நகரம் கிளைக் கழகம் என்று ஒரு வலைப் பின்னல் (நெட்வொர்க்) அடிப்படையில் கழக நிகழ்ச்சிகள் நடை பெற்றாகவேண்டும்.

குழந்தைகள் முகாம் முதல் மாணவர்கள், இளை ஞர்கள், மகளிர் முகாம்கள்வரை தொடர்ந்து நடைபெற்றாக வேண்டும். காலத்துக்கேற்ற அணுகுமுறைகளைக் கையாளுவோம்.

(7) கழகம் மக்கள் இயக்கமாகும். கழகப் பணி களுக்காக மக்களிடம் செல்லவேண்டும்; நிதி திரட்ட வேண்டும். அப்படித்தான் நம் இயக்கம் வளர்ந்து வந்துள்ளது. ஒரு பொதுக்கூட்டம் என்றால்கூட கடைக் குக் கடை சென்று நிதி வசூல் செய்யவேண்டும். தனிப்பட்ட நமக்காக அடுத்தவரிடம் பணம் கேட்டால் கூச்சம் வரும் கழகப் பணிக்காக பொது பணிகளுக்காக நிதி திரட்டுவதில் கூச்சப்படக் கூடாது.

அமைப்புப் பணிகள் சிறந்தோங்க நிதி என்பது மூச்சுக் காற்றாகும்.

மகளிர் அணியை உற்சாகப்படுத்துவீர்!

(8) ஆண் ஆதிக்க உணர்வு என்பது பொதுவாக சமூகத்தில் நிலவக் கூடியதுதான். நம் இயக்கத்தில் அதற்கு இடம் கிடையாது. மகளிர் அமைப்பை வளர்க்கவேண்டும்; உற்சாகப்படுத்தவேண்டும் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யவேண்டும். பெண்கள் முன்னின்று நடத்தும் பிரச்சாரம் இரட்டிப்புப் பலன்களைத் தரும்.

நமது மாநாட்டில்தான் பெண்களுக்கென்று தனி இடம் என்பது கிடையாது. காரணம் கொள்கையும் ஒழுக்கமும் நமது இரு கண்களாகும்.

அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம்!

(9) நமது பிள்ளைகளைக் கொள்கை ரீதியில் வளர்த்தெடுக்கவேண்டும். கழக நிகழ்ச்சிகளுக்குக் குடும்பத்துடன் கலந்துகொள்ளும் நிலை ஏற்பட்டாலே நமது குழந்தைகளிடத்தில் கொள்கைகள் தாமாகவே சென்றடையும். நமது கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் அக்கறை காட்டவேண்டும்.

கழகத் தோழர் வீடுகளில் கழகக் கொடி பறக்கவேண்டும்

(10) வீட்டுக்கு வீடு விடுதலை செல்லவேண்டும். தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் அங்கு விடுதலை வரவேண்டும் என்றார் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார். கழக இல்லம் என்பதற்கும் அடையாளம் அதுதான். விடுதலையைப் படிக்காத தோழர்கள் இருட்டில் அமர்ந்தவர்கள் ஆவார்கள். கழகத் தோழர்கள் இல்லங்களில் இயக்க நூல்கள் இருக்கவேண்டும். குடிஅரசு தொகுப்புகள் ஒவ்வொரு கழகத் தோழர் இல்லத்தில் கண்டிப்பாக இடம்பெறவேண்டும். நம் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து என்பது தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருவூலங்கள்தாம். வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அவற்றைப் படிக்கவேண்டும் பிள்ளைகளிடத்தில், குடும்பத்தவர்களிடத்தில் எடுத்துச் சொல்லவேண்டும்.

கழகத்தவர் வீடு என்றால் அதில் கண்டிப்பாகக் கழகக் கொடி பறக்கவேண்டும் இது ஒரு புற அடையாளமாகும்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

(11) தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வெகு எழுச்சியுடன் கொண்டாடப்படவேண்டும். நாடெங்கும் சூறாவளியாகப் பிரச்சாரம் நடைபெற வேண்டும். திராவிடர் கழகத் தோழர்களுக்கு என்ன வந்தது இதுவரை கண்டிராத வேகம் எழுச்சி கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்படவேண்டும் எதிரிகள் திகைக்கவேண்டும் துரோகிகள் மருண்டு ஓட வேண்டும்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பவர்கள் திகைக்க வேண்டும்.

திராவிடத்தால்தான் எழுந்தோம் உயர்ந்தோம் முதலில் மனிதனானோம் என்பதை தமிழ்நாட்டின் கடைகோடி மனிதனும் புரிந்துகொள்ள, தெரிந்துகொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம்.

(12) மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பேச்சுப் போட்டி, மிகவும் விரிந்த முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திராவிடர் கழகத் தோழர்களும், பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் இணைந்து பணியாற்றிடவேண்டும். ஆயிரக்கணக்கில் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்க ஆவன செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.


--------------------------------------------------------------------------------

1936 குடிஅரசு இதழிலிருந்து

12.1.1936 ஞாயிறன்று மாலை சென்னை பச்சையப்பன் கல்லூரி பெரிய மண்டபத்தில் சென்னை சுயமரியாதைச் சங்கத்தின் 3ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரையை குடிஅரசு (19.1.1936) இதழில் வெளிவந்ததை, கழகத் தலைவரின் ஆணைப்படி கழகத் துணைப் பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் திருச்சி கலந்துரையாடல் கூட்டத்தில் படித்தார்.
நன்றி- விடுதலை

ஆவணி அவிட்டம் பூணூல் புதுப்பித்தலாம்!



ஆரியர் உருவாக்கிய பொருளற்ற மூட விழாக்களில் பூணூல் விழா குறிப்பிடத்தக்கவொன்று பார்ப்பான் வாழ்வின் நான்கு கட்டங்களில் முதன்மையான பிரமச்சரியத்திற்குத் தொடர்புடையது இது.

திருமணமாகாத மாணவர் பரு வத்தில் பார்ப்பன இளைஞன் வேதங் களை முழுமையாகக் கற்றுக் கொள் ளுவதற்கெனத் தன் குருவுடனேயே தங்கி வாழக் கடமைப்பட்டவன்.



அவன் கருவான காலத்திலிருந்து ஆசானிடம் கற்று முடித்துத் திரு மணம் பண்ணிக் கொள்ளும் வரை யிலான பிரமச்சரியக் கட்டத்தில், அவனின் பெற்றோரிடமிருந்து அவன் மீது படியும் பாவக் கறையினைக் கழுவிக் கொள்ளும் வண்ணம் கீழ்க்கண்ட 12 தூய்மைப்படுத்தும் சடங்குகள் வற்புறுத்தப்படுகின்றன.

கர்ப்பதானம், புண்சவனம், சீமந் தோநயனம், ஜாத கர்மம், நாமகரணம், நிஷ்க்கரணம், அன்னப்ராசனம், சுத கர்மம், உபநயனம், சமாவர்த்தனம், கேசந்தம், விவாஹம்.

இவற்றுள் சட்டக் கட்டாய மாகக் கருதப்படும் முகாமையான இரண்டு சடங்குகள் சுதகர்மமும் உபநயனமும் ஆகும். இவ்விரண்டி லும் ஒரு சிறு குடுமியை விட்டு வைத்து, தலையில் நடுவட்ட மழிப்பு நிகழ்த்தும் சுதகர்மத்திற்கும் மேலாக உபநயனம் என்னும் பூணூல் அணி யும் சடங்கு மதிக்கப்படுகிறது. பூணூல் அணியும் முன்பு வரை அவன் சூத்திரத் தன்மையுடன் இருப் பதாயும், அணிந்தவுடன் அவன் இரண்டாம் முறையாகப் புதிய பிறப்பு எடுப்பதாயும் தத்துவம் கற் பிக்கப்படுகின்றது. இதை அச் சிறுவ னின் எட்டாம் அகவையிலேயே நடத்தி விடலாம்.

பருத்தி நூல்கள் மூன்றினை ஒன் றாகச் சுருள் செய்து மாலை வடிவ மாக்கிப் பார்ப்பனச் சிறு வனின் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வரையிலும் குறுக்கே அணிவிக்கப் படும் முப்புரி நூலுக்கு யக்ஞோப விதா எனப் பெயர்.

இச்சடங்கின் தொடக்கத்தில் பார்ப்பனச் சிறுவன் சூரியனுக்கு எதிரே நின்று மும்முறை தீ வலம் வரவேண்டும். பிறகு குரு காயத்ரி மந்திரத்தைப் பத்து முறை ஓதி யக்ஞோபவிதா முப்புரிக்குத் தெய் வத் தன்மை ஏற்றிவிட்டு, அதனைப் பையனை மாட்டிக் கொள்ளச் செய்வார். பூணூலணிந்த புதிய பிறவி, தனக்கும் தன் ஆசானுக்கும் தேவையான உணவுக்கென்று விழா வில் வந்து குழுமியுள்ள கூட்டத்தி னரிடம் பிச்சை கேட்டுக் கையேந்து வான்.

பின்னர் சாவித்ரி ஜெபம் பண்ணு மாறு குரு அவனைப் பயிற்றுவித்து, வேதமோதி சமயச் சடங்குகளை நிறைவேற்றும் தகுதியை அவனுக்கு உண்டாக்குவார். இறுதியாக அவ னுடைய இடையில் மூஞ்சைப் புல் லாகிய அரைஞாண் கட்டப்பட்டு பூணூலணியும் உபநயனச் சடங்கு முடிக்கப் பெறுகிறது.

காலப் போக்கில் க்ஷத்திரியரும், வைசியரும் தங்களை முப்புரி நூல் அணியும் சடங்கிற்கு உட்படுத்திக் கொண்டு இரு பிறப்பாளர் பட்டி யலில் இணைந்து கொண்டாலும், இன்று நடைமுறையில் இவ்விரு வர்ணத்தாரும் சூத்திரராகவே பாவிக் கப்படுகின்றனர். எனவே இவர்களின் பூணூல் மாட்டும் செயலுக்குச் சிறப்பேதும் கிடையாது.

பார்ப்பனர்களைப் பார்த்து ஆசா ரியாரும், பத்தரும், செட்டியாரும் கூடப் பூணூல் போட்டுக் கொள் வதுண்டு. விசுவ பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் சாத்திரத்தில் இதற்கு இடம் உண்டா என்றால் அதுதான் இல்லை.

இந்த மாதம் 24 ஆம் தேதி (ஆவணி 8) பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப் பித்துக் கொள்ளப் போகிறார்களாம். இட ஒதுக்கீட்டில் இன்னும் ஜாதி ஏன்? ஜாதி வாரி கணக்கெடுப்பு கூடாது என்கிற பார்ப்பனர்கள்தான் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட் டத்தன்று பூணூலைப் புதுப்பித்துக் கொள்கின்றனர்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

வாலாஜா படைத்த வரலாறு





அய்யாவை அழைத்து அக மகிழ்ந்த ஊர்

தமிழ்நாட்டில் முதன்முதலாக உருப்பெற்ற நகராட்சி வாலாஜா. சென்னையிலிருந்து வெள்ளை யர் அரசு ஏற்படுத்திய முதல் தொடர்வண்டி வழித் தடம் வாலாஜா. அறிவுலக ஆசான் அய்யாவை அழைத்து வரவேற்பு அளித்து அகமிக மகிழ்ந்த ஊர் வாலாஜா.

தமிழ்நாட்டில் வாலாஜா பெயரில் வாலாஜா நகரம், வாலாஜா ஏரி, வாலாஜாபாத் உண்டு. அந்த வரிசையில்தான் வாலாஜாபேட்டை நகரமும். மத மாச்சரியங்கள் மறந்து அமைதியாய் வாழ்ந்திருக் கும் மக்களிடையே மதவெறியர்களின் ஆரவாரம்-வெற்றுக்கூச்சல். மதவெறிக்களமாக மாறிவிடக் கூடாதே எனும் பதைபதைப்பில் திராவிடர் கழகம்-தமிழர் தலைவரின் கட்டளைக்கிணங்க காரியத்தில் இறங்கியது.

மனிதநேயத்தை மலரச் செய்ய....

மனித ஒற்றுமையை வளர்த்தொடுக்கவும், மனிதநேயத்தை மலரச் செய்யவும், கழக செயல் வீரர்களின் செயல்பாட்டு விளையாக அரக் கோணம் கழக மாவட்டத்தின் சார்பில் வாலாஜா நகராட்சி திருமண மண்டபத்தில் பெரியாரியல் பயிற்சி முகாம் 200 இளம் குருத்துகள் (மாண வர்களே பெரும்பாலும்) பங்கேற்க சீருற நடை பெற்றது.

ஆகஸ்ட் 7, 8 ஆகிய இரு நாள்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாலாஜாவில் எங்கு பார்த்தாலும் கழக் கொடிகளும், கருப்புச் சட்டைகளின் நடமாட்டத்துடனும் காட்சிகள். மதவெறியை அடிக்கடி தூண்டிடும் தூபம் போட்டிடும் இந்து முன்னணி வகையறாக்களுக்கு வாலாஜா ஒரு முக்கிய கேந்திரம். இந்து மக்களின் உரிமையைப் பாதுகாத்திட வேலூரில் மாநாடு வேறு. இந்த சூழ்நிலையில்தான் இளைய தலைமுறையை மதவாதப் பிடிக்குள் சிக்காமலிக்க தமிழர் தலைவரின் ஆணைப்படி இந்த பயிற்சி முகாம்.

பெரியாரியல் பயிற்சியின் நோக்கம்!

அறிவில் தெளிவை, சிந்தனைப் போக்கில் அறிவியல் மனப்பான்மையை, எந்த ஒன்றையும் பகுத்தறிவு நோக்கில் அணுகிடும் போக்கை- நடைமுறையை மாணவர்கள் - இளைஞர்கள் உள்ளத்தில் ஏற்படுத்திட வேண்டும் என்பதே பெரியாரியல் பயிற்சி பட்டறையின் நோக்கம். மாவட்ட கழக நிருவாகிகள், கோ.பெருமாள், சொ.சீவன்தாசு, பாணாவரம் மா.பெரியண்ணன் மற்றும் இளைஞரணி, மாணவரணி நிருவாகிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் செயலாற்றி பயிற்சிப் பட்டறையில் 200 பேர்களை பங்கேற்கச் செய்தது பாராட்டுக்குரியது.

வீ.அன்புராஜ் தொங்டகி வைத்தார்

ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 10மணிக்கு பயிற்சிப் பட்டறையை சுருக்கமான தமது வழிகாட்டுதல் உரையோடு தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்கி வைத்தார். எப்போதும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அவரின் சுறுசுறுப்பு, அளவான பேச்சு, உட்கார்ந்து பணிசெய்ய விரும்பாத நடை, கொள்கையின் மீது அளவற்ற ஈடுபாடு, இயக்கத்தின் போக்கில் புலிப்பாய்ச்சலை, புதுமையை புகுத்திட வேண்டும் என்று அறிவியல் நோக்கு கழகத் தோழர்களின் செயல்பாட்டில் புதுவேகத்தை ஏற்படுத்துவதாய் இருப்பதை நேரில் நிகழ்வுகளில் காணமுடிகிறது.

வாலாஜா வில் தொடக்க நிகழ்வில் பயிற்சி முகாமில் அவரின் பங்கு பணி இருக்கும் போதே- மறுநாள் ஆந்திர தலைநகர் அய்தராபாத்தில் பெரியார் திரைப் பட தெலுங்கு பதிப்பு தொடக்க நிகழ்ச்சி பற்றியும், அய்யா பெரியாருக்கு அங்கு எப்படியாவது சிலையினை திறந்திட வேண்டும் என்பது பற்றியும் ஆன எண்ண ஓட்டம்-செல்பேசி உரையாடல் என அவரின் செயல்பாடு வியக்க வைத்தது. துணைப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில், பொதுச் செயலாளர் கள் கலி. பூங்குன்றன், சு.அறிவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் தொடக்க நிகழ்ச்சி 5 நிமிடத்தில் முடிவுற்று வகுப்புகள் தொடங்கிட வகை செய்து அவர் புறப்பட்டார்.





வாலாஜாவில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்ற தோழர்கள் (8.8.2010).

தலைப்பும்-வகுப்பும்

புதிய வரவுகளான மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெரி யாரை அடையாளப்படுத் திடும் பெரியார் ஓர் அறி முகம் எனும் தலைப்பிலான முதல் வகுப்பினை கவிஞர் கலி.பூங்குன்றன் எடுத்தார். இயக்க வரலாறு, கடவுள் மறுப்பும் தமிழர் தலைவரின் சிறப்பும் எனும் தலைப்பு களில் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு, இதிகாசப் புரட்டு, எனும் தலைப்பில் துரை.சந்திரசேகரன், பார்ப் பனர் பண்பாட்டு படை யெடுப்பு பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் ஆகிய தலைப்புகளில் கவிஞ ரும், பெண்ணுரிமை பற்றி துணைப் பொதுச் செயலா ளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, சாமியாடுதல் மோசடியே எனும் தலைப்பில் டாக்டர் இரா. கவுதமன், தமிழரா-திராவிடரா? இந்துத்துவா? ஆகிய தலைப்புகளில் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். பழ.வெங்கடாசலம் நடத்திய மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி காஞ்சி கதிரவனின் அறிவியல் விளக்க குறிப்புகள் சிறப்புற அமைந்தன.

இளம் குருத்துகள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் தமிழர் தலைவர்

இரண்டாம் நாள் முகாமில் தமிழர்தலைவராம் நம் கழகத் தலைவர் சமூக நீதி எனும் தலைப்பில் வகுப்புரிமை வரலாற்றை, இடஒதுக்கீட்டின் தொடரோட்டத்தை மிகவும் எளிமையாக இளம் மாணவர்களும், இளைஞர்களும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் வகுப்பு நடத்தினார்.

திரா விடர் கழகத்தின் அணுகு முறையை பற்றிய வகுப்பு இயக்கத்தின் நடை முறையை-வரலாற்றுப் போக்கை விளக்குவதாய் இயக்க வரலாற்றோடு இணைந்த தமிழர் தலைவரின் வகுப்பு அமைந்தது.

கேள்வியும் கிளத்தலும்

மாணவர்கள் எழுப்பிய அய்ய வினாக்களுக்கு அருமையான விளக்கங்களை பதிலுரையாகத் தந்த தமிழர் தலைவரின் அணுகுமுறை இளைய தலை முறையையும், பெரியார் பெருந்தொண்டர் களையும், இயக்கத்துக்கு அப்பாற்பட்டவாகளை யும் ஈர்ப்பதாய் இருந்தது.

சான்றிதழ் வழங்கினார்

இருநாள் பயிற்சி முகாமிலும் பங்கேற்ற 200 மாணவர்-இளைஞர்களுக்கும் உரிய சான்றித ழினை தமிழர் தலைவர் வழங்கினார். கொள்கை விளக்க நடன நிகழ்ச்சி குடியாத்தம், பெரியார் பிஞ்சுகளான இர.க.அறிவுச்சுடர், இ.அ.மதிவதனி ஆகியோரின் கழக பாடல்களுக்கான பரதநாட் டியம் (நடன நிகழ்ச்சி), அருமையாக அரங்கேற்றப் பட்டது. முடிவில் மாவட்ட செயலாளர் சொ.சீவன்தாசு நன்றி கூறினார்.

நேரிடை களப்பயிற்சியாக....

பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நேரிடை களப்பயிற்சியாக 8.10.2010 மாலை நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், திறந்தவெளி மண்டல மாநாடும் அமைந்தது. மக்களை வீதிதோறும் சென்று சிந்திக்கத் தூண்டிய நிகழ்வாக மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் அமைந்தது.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

ஊர்வலத்தில் வேலூர் மண்டலத்தின் மாவட்ட கழக நிருவாகிகளும், தோழர்களும், கொடி பிடித்த கைகளுடன் முழக்கமிட்டு வந்த காட்சி இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? எனும் கேள்விக் குப் பதிலாய் அமைந்தது.

மகளிரணியினரின் தீச்சட்டி,

இளைஞர்களின் அரிவாள் மீது நிற்பது

காவடி ஆட்டம், முதுகில் அலகு குத்தி

கார் இழுத்து வந்த காட்சி, குபீர் தீ உமிழும்

நிகழ்ச்சி என மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி களை கட்டியது.

திறந்தவெளி மாநாடு

அறிவார்ந்த சமுதாய புனரமைப்புக்குத் தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், அய்யாவின் அரிய கருத்துக் கருவூலமான குடிஅரசு தொகுப்புகள் வெளியீடும், போட்டி போட்டு அதனை வாங்கிய காட்சியும், ஒரத்தநாடு ஒன்றியம் விடுதலைக்கு சந்தா வழங்கிய காட்சியும், தமிழர் தலைவரின் சங்க நாதமும் மண்டல மாநாட்டின் முத்தாய்ப்பான நிகழ்வுகள் இளை ஞர்களை எழுச்சிகொள்ளச் செய்வதாய் அமைந் தது. மாபெரும் மக்கள் திரள் கட்சியைத் தாண்டி மதவெறிக்கு எதிராக திரண்டிருந்த காட்சி இயக்கத்தின் மனிதநேயப் பணிகளுக்கு உள்ள மக்கள் ஆதரவை எடுத்துச் சொல்வதாய் அமைந்தது.

மொத்தத்தில் வாலாஜா புதிய வரலாறு படைத்தது என்பதே உண்மை!

- துரை.சந்திரசேகரன்
துணைப் பொதுச் செயலாளர்

புதன், 11 ஆகஸ்ட், 2010

சாவுக்கு பின்னும் ஜாதியை நிலைநாட்டும் சடங்குகள்




மனிதன் தன் வாழ்க்கையில் குழந்தைப் பருவம் முதல் கிழப்பருவம் வரை அடையும் தன்மையும் இயற்கை யின் தத்துவமேயாகும். அவனுடைய அங்கங்கள் (உறுப்புகள்) குழந்தைப் பருவம் முதற் கொண்டு சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே வருகின்றன. அந்த வளர்ச்சி அவன் உண்ணும் ஆகாரங்களையும் மன நிம்மதியான வாழ்க்கையையும் பொறுத்ததாகும். இப்படி வளர்ச்சியடையும் உடல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வந்தவுடன், அதன் பிறகு வளருவது நின்று விடுகிறது. பிறகு அவ்வுறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் சக்திகளுக்கு ஏற்றவாறு இயங்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

அந்த உறுப்புகள் எத்தனை நாளுக்குத்தான் அப்படியே இருக்க முடியும்? அவையும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இயங்கும் சக்தியைக் கொண்டவைகளாக இருக்கின்றன. நாளடைவிலேயே அங்கங்களுக்குள்ள சக்தி சிறிது சிறிதாகக் குறைவதற்கு ஆரம்பிக்கிறது. இப்படியே ஒவ்வொரு அங்கமும் பலவீனம் அடைந்து வரும் காலத்தில் மனிதன் கிழப் பருவத்தை அடைந்து கொண்டே வருகிறான். கிழப்பருவம் வளர்ச்சியடைந்து கொண்டே வந்து, முற்றிலும் கிழத்தன்மை அடைந்தவுடன், உடலின் உறுப்புகள் யாவையும் ஒருவித சக்தியும் இன்றி அங்கும் இங்கும் அசையக்கூட போதிய சிறிதளவு பலம்கூட இல்லாமல் போய்விடுகின்றன.

அத்தன்மை வந்தவுடன் மனிதன் உடலினுள் இருக்கும் உறுப்புகளும் அதே தன் மையை அடைந்து உண்ணும் உணவை ஜீரணிக்கவும், அதைப் பக்குவம் செய்து, சத்தைக் கிரகிக்கும் உறுப்புகள் போதிய பலமும் இன்றிப் போய், உணவும் செல்வதற்கும் இல்லாமல் போய்விடுகிறது. பின்பு மனிதனுக்கு இறுதியில் எஞ்சி நிற்பது காற்று ஒன்று தான். அக்காற்று மூக்குக்கும் சுவாச உறுப்புகளுக்கும் இடையில் உள்ள துவாரத்தின் வழியே போய்வந்து கொண்டிருக்கிறது.

சுவாசிக்கும் காற்றில் மனிதன் பிராணவாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளியிடுகிறான். அந்த ஆராய்ச்சிப்படி இதுவரை அவன் பிராண வாயுவைக் கிரகித்து, கரியமிலவாயுவை வெளியிட்டு வருகிறான். இந்தத் தன்மையும் ஏற்பட சுவாச உறுப்புக் கள் பலமுடன் இருந்து இயங்கினால்தானே முடியும்? ஆனால் இயற்கையின்படி எல்லா உறுப்புகளும் பலவீனம் அடைந்தது போல் சுவாச உறுப்புகளும் பலவீனம் அடைய ஆரம்பிக்கின்றன. அவைகளுக்குப் போதிய அளவு அதாவது ஒரு சிறிது அளவு காற்றையாவது இழுத்து கிரகிக்கும் பலம் உள்ள வரை மனிதன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறான் என்று கூறுகிறோமே அந்த நிலையை அடைகிறான்.

இறுதியில் அந்தப் பலம் கூட இல்லாமல் சுவாச உறுப்புகள் முற்றிலும் பலவீனம் அடைந்து விடுவதால் சிறிது கூட காற்றைச் சுவாசிக்க முடியாமல் போய் விடுகிறது. அப்போதுதான் மனிதன் இறந்து விடு கிறான் என்று சொல்லப்படுகிறது. அவன் உடலில் காற்று போய், உடல் உறுப்புகளையும், இரத்தத்தையும் சுத்தம் செய்து கொண்டு வந்ததன் காரணமாக உடலில் எந்தவிதக் கெடுதலும் ஏற்படுவதில்லை. சுவாசிக்கப் பட்ட பிராணவாயு உடம்பில் உள்ள இரத்தத்தைச் சுத்தம் செய்வதனால் செய்யப்பட்ட இரத்தம் பரவிய உடலின் தசைகள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன.

ஆனால் மனிதன் இறந்தவுடனோ சுவாசம் இல்லை. அதனால் உடலின் தசைகள் கெடுவதற்கு ஆரம்பிக் கின்றன. அந்தப் பிணம் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடி கெட்டுப் போய்விடும். அதைத் தகுந்தபடி எரித்துவிடாமலோ இருக்கப்பட்டு விடு மானால் அந்த உடல் அழுகிக் கொழகொழத்துப் போய் சகிக்க முடியாதபடி துர்நாற்றமடிக்க ஆரம்பிக்கிறது. அதற்கென்றே உடலைப் புதைத்தோ அல்லது எரித்தோ விடுகிறார்கள். இப்படி மனிதன் பிறந்தது முதல் இறந்ததுவரை உண்டாகும் சம்பவங்கள் அத்தனை யையும் நேரில் காணுகிறோம். சுவாசிக்கும் காற்று நின்றவுடன் உடலை அடக்கம் செய்கிறார்கள்.

இத்தன்மை மனிதன் என்று சொல்லப்படுபவர்கள் அத்தனை பேருக்கும் அவ்வித முடிவுதான். தாழ்ந்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இதே நிலைதான், மேல்ஜாதி கடவுளுக்கும், அடுத்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இந்நிலைதான். அவன் யோக்கியனானாலும், முனிவரானாலும், சித்தரானாலும், மகாபக்திமான் ஆனாலும், கடவுள் அவதாரம் ஆனாலும், தியாகி ஆனாலும், மற்றும் மந்திரியானாலும் நாட்டின் தலைவன் என்பவன் ஆனாலும். இன்னும் புலவன், சிற்பி, பாடகன், ஓவியன், மற்றும் எப்பேர்பட்ட வெங்காயமா னாலும், இந்த நிலையை அடைந்தே தீரவேண்டும்; இது இயற்கையே ஆகும். இப்படி மனிதனுக்கு மட்டுமல்ல; உயிர் உள்ளது என்று எவை எவை சொல்லப்படுகின்றனவோ அவைகள் அத்தனையும் இப்படிப்பட்ட இயற்கைத்தன்மையை அடைந்தே தீருகின்றன - மரம் பட்டுப் போய் விட்டது என்றால், அது வளர்ச்சி இன்றிப் போய்விட்டது என்பது பொருள். அதுமுதல் அந்தப் பட்டுப்போன மரம் காய்ந்துபோக ஆரம்பிக்கிறது; ஒருவித ஈரப்பசையும் இன்றி வெற்றுக்கட்டையாக ஆகிவிடுகிறது, இப்படியே உயிருள்ளது என்பவைகள் அத்தனையும் செத்துப் போகும் நிலையை அடைகின்றன.

செத்துப்போகுதல் என்பது சத்துப் போய்விடுதல் என்பது பொருள். வளருவதற்கு வேண்டிய சத்துக்கள் என்னென்னவோ அத்தனையும் இல்லாமல் போய்விட்ட பிறகு, அதாவது சத்துப்போய்விட்ட பின் அதை சத்துப் போகுதல் என்பது செத்துப் போகுதல் என்று ஆகி இருக்கிறது.

மரம் செத்துப் போனவுடன் அதை அடுப்பு எரிக்க உபயோகிக் கிறோம். நாய் மாடு, கழுதை செத்தவுடன் புதைக்காவிடில் அழுகிப் புழு, பூச்சி பிடித்து விடுகிறது. இறுதியில் அதுவும் மண்ணுடன் மக்கிப் போய்விடுகிறது. செத்துப்போனது என்ற பிறகு அதைப் பற்றி ஒன்றுமே கிடையாது. அதன் முடிவு அத்துடன் சரியாகிவிடுகிறது. இதை நாம் கேள்விப்படவில்லை; சாஸ்திரத்தில் படிக்கவில்லை. கடவுளும், வெங்காயமும் கூறியதாக நான் உங்களிடம் கூறவில்லை. நேரில் கண்டவை; நீங்களும் நேரில் காணுகிற விஷயமே அன்றி, நான் அவன் சொன் னான், இவன் சொன்னான் என்று சொல்லவில்லை; எனவே இந்த முடிவுக்குப் பிறகு என்ன இருக்க முடியும்? ஒன்றுமே கிடையாது. அத்துடன் வாழ்க்கை இறுதி யடைந்து போய் விடுகிறது.

பார்ப்பனன் தங்கள் வாழ்க்கைக்குச் சாதகமாகப் பலவழிகளைக் கையாளுகின்றான். மனிதன் இறந்தவுடன் அந்த உடலை அவரவர் மதப்படி, அதிலும் மதத்தின் உட் பிரிவாக அமைக்கப்பட்டுள்ள ஜாதிமுறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறான். அதன்படி மக்களும் இது எங்கள் ஜாதி வழக்கம் என்று கூறிக்கொண்டு, புதைப்பவர்கள் புதைப்பதும், எரிப்பவர்கள் எரிப்பதுமாக இருக்கின்றனர்.

இதனால் என்னவென்றால் அந்தந்த ஜாதிக்காரன் அவனுடைய பின்சந்ததிகள் இன்னஜாதியைச் சேர்ந்த வர்கள் அவர்களும், அதே முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற முறையை நிலைநாட்டுவதன் மூலம் நடத்தப்படு கின்றன. எனவே மனிதன் இறந்த பின்னும் கூட பார்ப்பான் மதப்பிரச்சாரத்திற்கென்று இன்னின்ன பழக்க வழக்கம் என்று ஏற்படுத்தி இருக்கிறான்.

அத்துடன் விடவில்லை. செத்துப்போனவுடன் உடலிலிருந்து ஆத்மா என்று ஒன்று பிரிந்துவிடுகிறதாம். அது இங்கே தங்காமல் நேராக மேல்லோகம் போகிறதாம்! இவ்வளவு இயற்கைத் தன்மைகளையும் கண்டபின் ஆத்மா என்பது எங்கே இருக்கிறது? அது எப்படிப் பிரிகிறது? என்றால் அது உருவம் அற்றது, கண்ணுக்குத் தெரி யாதது என்று கூறினார்கள். அந்த ஆத்மா நேராக மேல் உலகம் சென்று அங்கு அது, இங்கு செய்த பாவபுண்ணி யத்துக்கு ஏற்றபடி தண்டனை பெறுகிறதாம். பாவம் செய்த ஆத்மா நரகத்தில் தள்ளப்படுகிறதாம். புண்ணியம் செய்த ஆத்மா மோட்சத்தில் தள்ளப் படுகிறதாம். இங்கேதான் உடல் நம் கண்முன்பாகவே எரிக்கப்பட்டது அல்லது புதைக்கப்பட்டது. உருவம் அற்ற ஆத்மா எப்படி அங்கே தண்டனை பெறும்? என்று கேட்டால் அந்த ஆத்மாவுக்கு வேறொரு உடலை மேல் உலகத்தில் கொடுக்கிறார்களாமே! அந்த உடலை இந்த ஆத்மா உடுத்திக் கொண்டவுடன் மனித உருவம் அடைகிறதாம். அதே உடலுக்கு அங்கே தண்டனை கிடைக்கிறதாம். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும். பாவமோ புண்ணியமோ செய்த உடல் நம் கண்முன் இங்கே இருக்க, அங்கே வேறொரு உடல் பாவத்தின் தண்டனையையோ, புண்ணியத்தின் சுகத்தையோ அனுபவிக்கிறதாம். அப்படியானால் உண்மையில் பாவம் செய்த உடலைத் தண்டிக்க வேண்டும்; உண்மையில் புண்ணியம் செய்த உடல் சுகமடைய வேண்டும். இதை விட்டு விட்டு, ஏதும் அறியாத வேறொரு உடலை வதைப்பதும், சுகப்படுத்துவதும் என்ன நியாயம் என்று கேட்டால் உடனே இவன் நாத்திகம் பேசுகிறான் என்றுதான் சொல்லத் தெரியுமே தவிர, தக்க பதில் ஒன்றும் கூற முடியாது.

மறுபடியும் அந்த ஆத்மா உலகில் உருவம் எடுத்து வருகிறதாம்! அந்த உருவம் பாவ புண்ணியத்திற்கு ஏற்றபடித் தக்க உருவம் அடைகிறதாம். அதில் ஃபஸ்ட் கிளாஸ் (முதல்தரம்) உருவம் என்று சொல்லப்படுவது பார்ப்பன உருவம். மற்றவை எல்லாம் அதற்குக் கீழ்ப்பட்டவை. மனித உருவத்திலேயே பார்ப்பான் தவிர்த்த மற்ற கீழ்ஜாதி உருவங்கள் தரம் பிரித்து உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதற்குத் தகுந்தபடி அமைக்கப்பட்டிருக் கின்றன. மனித உருவத்துக்குக் கீழ் மிருக உருவம்! அதிலும் தரம் பிரித்து அமைத்து மற்றப்படி மரம், செடி, கொடி இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் அயோக்கியப் பார்ப்பனர்கள் தங்களை மட்டும் பெரும் புண்ணியாத் மாக்கள், மற்றவர்கள் எல்லாரும் பெரும் சண்டாளர்கள் என்பதை வாய்விட்டுக் கூறுவதற்குப் பதிலாக இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூறவேயாகும். இப்படி நம்மை எந்த விதத்தில் இழிவு படுத்தவேண்டுமோ அம்முறைகளில் எல்லாம் இழிவுபடுத்தி இருக்கிறார்கள்.

அந்த ஆத்மாதான் மேல்லோகத்தில் புண்ணியத்திற் கேற்றபடி மோட்சத்திலேயோ அல்லது பாவத்திற்கேற்றபடி நரகத்திலேயோ தள்ளப்பட்டிருக்கிறதே, பிறகு இங்கே எப்படி வந்தது? அதனதன் நல்வினை தீவினைக்குத் தகுந்தபடி மோட்சம்- நரகத்தில் போய்ச்சேருகிறது என்ற பிறகு இங்கே எப்படிக் குதித்து வரமுடியும்? அப்படி யானால் மோட்சத்திலிருந்து தப்பி ஓடிவந்ததா? நரகத்தை விட்டு ஓடிவந்து விட்டதா? அப்படி அங்கு போய்ச் சேருகிற ஆத்மா சாந்தியடைய இங்கே பார்ப்பானுக்குத் தானதர்மம் செய்தால் போதுமாம்! உடனே அது அவர்களுக்குப் போய்சேருகிறதாம்! அதை அடைந்த அவர்கள் சுகம் அடைகிறார்களாம்! என்ன முட்டாள் தனம் என்பதைச் சிந்திப்பதே இல்லை. 100-க்கு 100 முட்டாள்களாக இருப்பவர்கள்தான் இன்னமும் இதை நம்பிக்கொண்டு பார்ப்பானுக்கு அள்ளிக் கொடுக்கின்றனர். கையில் பணம் காசு இல்லை என்றால் கூட கடன் வாங்கியாவது திவசமும், கருமாதியும் செய்கிறான்.

இப்படித் திவசம் செய்வது குறிப்பிட்ட நாள் வரையிலும் என்று கூட இல்லை. இவன் உயிர் இருக்கும்நாள்வரை அவன் தகப்பனுக்குத் திவசம் செய்கிறான். பார்ப்பான் கூறி இருக்கிறபடி மேலே சென்ற ஆத்மா பிறகு என்ன உருவம் எடுத்ததோ தெரியவில்லை. அந்த உருவம் எடுத்த பிறகும் இவன் திவசம் செய்தானாகில், பார்ப்பான் கூறுகிறபடி அந்த ஆத்மா எங்கே இருந்தாலும் அந்த தானப் பொருள்கள் போய்ச்சேர வேண்டும். அப்படி இது வரை யார் அடைந்திருக்கிறார்கள்?

அப்படியே அவன் கூறுவது உண்மை என்றாலும் இக்கூட்டத்தில் உள்ள அத்தனை பேரும், ஏன் இவ்வூரில் உள்ள அத்தனை பேரும் மற்றும் இந்நாட்டு மக்கள் அத்தனை பேரும் இதற்கு முன் ஏதாவது ஒரு பிறவியில் இருந்திருக்க வேண்டும்; நாம் இல்லை என்றாலும் மற்ற சீவராசிகளாவது முதலில் மனித உருவத்தில் இருந்திருக்கவேண்டும். அவைகள் இறந்தவுடன் அதனதன் பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள். அத்தனை பேருக்கும் இல்லை என் றாலும் ஒருசிலருக்காவது தன்னுடைய பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள்; அப்படிக் கொடுப்பது இப்போது இவர்களுக்கு வந்து சேரவேண்டும். நியாயப்படி அதுதான் முறையாகும் - ஆனால் இதுவரை அப்படி யாரும் அடைந்ததாகக் கிடையாது. கேள்விப்பட்டது கூட இல்லை. எனவே பார்ப்பானுக்குக் கொடுத்த பின் அதை ஜீரணித்துவிடுகிறான். பிறகு எங்கே இவன் அப்பனுக்கு மேல்உலகத்துக்கு? போகமுடியும்? அப்படியே பார்ப்பான் மேல் உலகத்துக்கு அனுப்பும் சக்தி கொண்ட மந்திரம் கொண்டவனாக இருந்தால் இன்றைக்கு எவ்வளவோ காரியத்துக்குப் பயன்படும். ஆனால் அத்தனையும் புரட்டு என்பதற்கு நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.

ஒரு பார்ப்பனனிடம் ஒரு மடையன் திவசம் கொடுத்துக் கொண்டிருந்தானாம். அப்போது பார்ப்பனன் சொல்படி அந்த மடையன் ஆற்றில் உள்ள தண்ணீரைக் கையால் அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தான். அதன் காரணம் என்ன வென்றால் இவன் இறைக்கும் தண்ணீர் மேல் உலகத்திற்குப் போய் இவனுடைய முன்னோர்களுக்குப் பயன்படு கிறது என்பதாகும். அந்த அடிப்படையில் புரோகிதன் மந்திரம் கூற இவன் தண்ணீர் இறைக்கிறான்.

அப்போது அதைப் பார்த்த ஒருவன், தானும் தண்ணீரைக் கரையின் மேல் வாரி இறைத்தான். அதைக் கண்ட புரோகிதன் நீ ஏன் தண்ணீர் இறைக்கிறாய் என்றதற்கு நான் என்னுடைய ஊரில் உருளைக் கிழங்குத் தோட்டம் வைத்திருக்கிறேன். அதற்குத் தண்ணீர் இறைத்து அதிக நாள்கள் ஆகின்றன. இப்போது நீங்கள் மந்திரம் சொல்லும் போது இறைத்தால் இந்தத் தண்ணீர் என்னுடைய உருளைக்கிழங்குத் தோட்டத்துக்கு போய்ச்சேரும், என்றானாம்.

அதற்குப் புரோகிதன் அது எப்படி அவ்வளவு தூரம் போய்ச் சேரும்? என்று கேட்க அதற்கு இவன் நீங்கள் இன்றைக்கும் தண்ணீர் எங்கேயோ கண்ணுக்குத் தெரியாமல் ஒருவரும் காண முடியாத அவ்வளவு உயரத்தில் இருக்கும் மேல் உலகத்திற்குப் போகிற பொழுது இது இங்கே அடுத்த ஊரில் உள்ள என் தோட்டத்திற்குப் போகாமல் இருக்க முடியுமா? என்று கேட்டானாம். பிறகு புரோகிதன் நம்முடைய சாயம் வெளுத்தது என்று நினைத்து தலைகுனிந்து போய்விட்டானாம்.

(விடுதலை, 21.2.1956)

கோயிலைச்சுற்றுகிறதாம் பேய்!

அம்மன் சக்தி எங்கே?

மேட்டூர் ஆக 9, கிராமத்தில் உள்ள பக்தர்கள் பலர் உடல்நலக் குறைவால் பாதிப்பதற்கு கோவிலை சுற்றி உலவும் பேய்களே காரணம் என குறி சொன்னதால், நேற்று பக்தர்கள் கோவிலில் இருந்து பேயை விரட்டி அம்மனுக்கு பூஜைகள் செய்தனராம்.

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, சாம்பள்ளி கோயில்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் நான்கு மாதத்திற்கு முன் கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்தினர். குடமுழுக்கு நடத்திய பின், விழா குழுவினர் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.அதற்கு என்ன காரணம் என கிராம மக்கள் சிலர் ஒரு சாமியாரிடம் குறி கேட்டுள்ளனர். கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய போதிலும், கெட்ட ஆவி ஒன்று கோவிலை சுற்றி உலவுவதால் அம்மனால் பக்தர்களுக்கும், கிராமத்திற்கும் நல்லது செய்ய முடியவில்லை. கோவிலை சுற்றி உலா வரும் பேயை விரட்டினால், விழா குழுவினருக்கு நோய் பாதிப்பு வராது என சாமியார் குறி சொல்லியுள்ளாராம்.

அதனை தொடர்ந்து பக்தர்கள் நேற்று காலை கோவில் அருகிலுள்ள வேப்பமரத்திற்கு பூஜை செய்து, அருகில் மாவில் பொம்மை செய்து, அதில் கோவிலைச் சுற்றி திரியும் ஆவியை அடைத்து, ஊர் எல்லைக்கு வெளியில் கொண்டு சென்று மறைவான இடத்தில் வைத்தனர்.

பின்னர் பேய் ஊருக்குள் நுழையக்கூடாது என்பதற்காக பெண்கள் கிராமத்தின் எல்லையை சுற்றிலும் மஞ்சள் கலந்த தண்ணீர் தெளித்தனர். பேயை விரட்டிய பின் நேற்று மாலை கோவிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்ததாம். கோவிலை சுற்றித் திரியும் ஆவியை பக்தர்கள் பூஜை செய்து அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதாம்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறுகையில், மாரியம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்திய பின்னர் நிருவாகிகள் பலர் உடல் நலக்குறைவால் பாதித்தனர். எனவே, அவர்களுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு வராமல் இருக்கவும், மழை வேண்டியும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தி, ஊருக்குள் கெட்ட ஆவிகள் நுழையாமல் இருக்க பெண்கள் ஊர் எல்லையை சுற்றிலும் தண்ணீர் ஊற்றினார்களாம். மற்றபடி எதுவும் இல்லை,'' என்றனர்.
www.viduthalai.com

அட, மூடத்தனத்தின் முடை நாற்றமே!

ஊருக்குள் ஆவி நடமாட்டமா?

நாமக்கல், ஆக.9, நாமக்கல் அருகே வாகை மரத்தில் குடியேறிய தொழிலாளியின் ஆவி ஊருக்குள் நடமாடி நண்பர்களை மிரட்டுவதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளியை புதைத்த இடத்தில் கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனராம்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செக்குப்பட்டி காலனியில் ஏறத்தாழ 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த காலனியை சேர்ந்த லோகநாதன் (வயது 40) என்ற கூலி தொழிலாளி சமீபத்தில் பள்ளிபாளையம் அருகே ரெயிலில் அடிப்பட்டு இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை பெற்று வந்த உறவினர்கள் இங்குள்ள சூடுகாட்டில் புதைத்து விட்டனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக லோகநாதனின் ஆவி, அங்குள்ள வாகை மரம் ஒன்றில் தங்கி கிராமத்திற்குள் நடமாடுவதாக கிராம மக்களிடையே பீதி பரவியது.

இதற்கிடையே அந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்குள் அந்த ஆவி புகுந்து கொண்டதாக கிராமமக்கள் கூறுகின்றனராம். அத்துடன் அந்த ஆவி, இளம்பெண் மூலம் லோகநாதனின் நண்பர்களையும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. எனவே, ஆவியை விரட்ட, கிராம மக்கள் ஊர் எல்லையில் உள்ள முனியப்ப சுவாமியிடம் குறி கேட்டனர். குறி கூறுபவர், வீதி வீதியாக சுற்றிவந்து, ஆங்காங்கே கோழிகளை பலி கொடுத்து, லோகநாதனின் உடலை புதைத்த இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்தால் மட்டுமே ஆவியை விரட்ட முடியும் என்று கூறினாராம்.

அதன்படி, முனியப்ப சுவாமி வேடம் அணிந்து வந்த பூசாரி இரவில் தீப்பந்தம் ஏந்தி கிராமத்தில் வீதி, வீதியாக வலம் வந்தார். அத்துடன் லோகநாதனின் ஆவி குடியிருப்பதாக கூறப்படும் மரத்திற்கு தீ பந்தம் காட்டப்பட்டது. மேலும், லோகநாதனின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டனவாம்.

இந்த பூஜையில் அந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் கலந்து கொண்டனர். பெண்கள் எவரும் வெளியில் வரவில்லை. தற்போது ஆவி விரட்டப்பட்டு விட்டதாக கிராமமக்கள் நிம்மதியுடன் உள்ளனராம்.
www.viduthalai.com

இலங்கை அரசின் நிவாரணம்: நடவடிக்கை சரியில்லை

லண்டன், ஆக. 11 இலங் கையில் நடைபெற்ற போருக் குப் பின் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணி களை உரிய முறையில் மேற் கொள்ளத் தவறிய செயலுக்கு, இலங்கை அரசின் அறிக்கை யின் அடிப்படையிலேயே இலங்கை அரசுக்கு, உலகின் பல நாடுகளின் ஓய்வு பெற்ற தலைவர்கள் இணைந்து செயல்படும் மூத்தோர் என்னும் அமைப்பின் தலைவர் டெஸ்மாண்ட் டூடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ்க் குடி மக்களின் மீது தற்போது மேற் கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை மற்றும் சித்தரவதை யும், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்கள் காணாமற்போவதும் உண்மையில் பேரச்சத்தை ஏற் த்துவதாக உள்ளது என்று டூடு கூறியதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர் தென் ஆஃப்ரிக்க நாட்டின் உண்மையைக் கண்டறிந்து, நிவாரணம் தேடும் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.

பின்லாந்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்

எவர் ஒருவரும் நம்பிக்கையுடன் எதிர் பார்க்கும் அளவுக்கு இலங்கை அரசு தன் செயல்பாடுகளை உயர்த்திக் கொள்ளவில்லை. அரசின் செயல்பாடுகள் மேலும் வெளிப் படையானவையாக இருக்க வேண்டும் என்பதுடன் முறை யான ஊடகச் செய்திகள் வெளியிடப்பட அனுமதிக்கப்படும் ஒரு சகஜமான சூழ்நிலை நிலவவேண்டும் என்று பின்லாந்து நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மார்ட்டி அஹ்திசாரி கூறினார்.

மனித இனத்தின் துன்பங்களுக்கான முக்கிய கார ணங்களைப் போக்க உலகத் தலைவர்கள் பலரையும் உறுப்பினர்களாகக் கொண்ட இந்த மூத்தோர் அமைப்பை நெல்சன் மண்டேலா 2007 ஆம் ஆண்டில் உருவாக்கினார். இலங்கையில் போருக்குப் பின் மேற் கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் இலங்கையில் இன்னமும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதும், அரசினைக் குறை கூறுபவர்கள் சித்திரவதை செய்யப்படுவதும் பேரச்சம் தரத்தக்கவை என்று இந்த அமைப்பு தனது அறிக்கையில் குற்றம் சாற்றியுள்ளது.

மனித உரிமைகள் பற்றிய இலங்கை அரசின் மோசமான அணுகுமுறை, நல்லாட்சி தரத் தவறியது, தனது செயல்பாடுகளுக்குப் பொறுப்பாகப் பதில் அளிக்கத் தவறியது ஆகியவற்றைக் கண்டிக்காமல் உலக நாடுகள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது, இது போன்று செயல்பட மற்ற நாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த மூத்தோர் குழுவில் அயர்லாந்து நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேரி ராபின்சன், அய்க்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான், அல்ஜீரிய நாட்டின் முன்னாள் அயல்துறை அமைச்சர் லக்தர் பிராஹிமி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர், பின்லாந்து நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மார்ட்டி அஹ்திசாரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.