திங்கள், 22 மார்ச், 2010

உலக தண்ணீர் தினம்..




தண்ணீர் தினம்

தண்ணீர் என்றதும், தமிழ் நாடு, குறிப்பாக சென்னை மக்களிடையே புகழ் பெற்ற 'தண்ணி' அல்ல நம் நினைவுக்கு வர வேண்டியது.அது வேறு. அது கொண்டாடப் பட வேண்டிய ஒன்றும் அல்ல..அதற்கு என்று தனி நாளும் இவர்கள் வைத்துக் கொள்வதில்லை
பெரிய நீர் நிலைகளைப் பார்க்கும் பொழுது நம் மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி - இப்போதெல்லாம் எங்கே அந்த மாதிரி பார்க்க முடிகிறது? காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைப் பார்த்த நாட்கள் கனவாய்ப் போய் விட்டன. காவிரி என்று இல்லை, எந்த ஆற்றிலுமே 'புரண்டு ஓடும் நதிமகளை'ப் பார்க்க முடிவதில்லை. காய்ந்து போன நதிப் படுகைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வெறுமை தோன்றுகிறது. நம் மூதாதையர் நல்ல தண்ணீருக்காகப் பட்ட கஷ்டங்களின் வெளிப்பாடோ? அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் நம்மூர் அரசியல்வாதிகள் அதையும் கூறு போட்டு விற்க முற்சிப்பது தனிக் கதை.

மக்களோ, மாக்களோ... தண்ணீர், அதிலும் சுத்தமான குடி நீர் இன்றி வாழ்வது கடினம்.

உலகப் பரப்பில் முக்கால் பகுதி தண்ணீர் தான் என்றாலும் அதில் மக்களுக்குப் பயன் படக்கூடிய சுத்த நீரின் விகிதம் மிகக் குறைவு

உட்கொள்ளத் தக்க சுத்தமான நீர் என்பது - கானல் நீராகி வருகின்றது. சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான். எதிர் காலச் சந்ததியினருக்கு, நாம் இந்த உலகில் பிறந்தபோது காற்றும் நீரும் எவ்வளவு சுத்தமாக இருந்ததோ அதை அதே அளவு சுத்தமாக அல்லது அதைவிடச் சுத்தமாக நம்மால் விட்டுப் போக முடியவில்லை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு - ஐ எஸ் ஓ தர சான்றிதழ்கள் கூட இருக்கின்றன - தொழிற்சாலைகளுக்கு.

சுத்த நீரின் விகிதம் கிட்டத் தட்ட பாதி ஒரே ஏரியில்! இங்கே இருக்கும் படங்களைப் பாருங்கள். ஒரு சின்ன கப்பலே போகும் அளவுக்குப் பரந்த இந்த ஏரியின் ஆழம் சில இடங்களில் ஒன்றரை கி. மீ.க்கும் அதிகம்! ரஷ்யாவில் தெற்கு சைபீரியாவில் இருக்கும் பைக்கால் எரியைத்தான் பார்க்கிறீர்கள். இன்னொரு படம் கனடாவில் இருக்கும் ஒரு ஏரி. புகழ் பெற்ற நீர் வீழ்ச்சிகள், அமேசான், மிஸ்ஸெளரி, மிச்சி சிப்பி, கங்கை, பிரம்ம புத்ரா என்று நமக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆன பெயர்களை எல்லாம் விட்டு விட்டோம் என்றால், பூமியின் தெற்கு பகுதியில் தண்ணீர் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது என்பது புரியும்.


நீரின்றி அமையாது உலகினில் யார் யாருக்கும் வானின்று அமையாது ஒழுக்கு ... என்றார் வள்ளுவப் பெருமான். 2000 வருடங்களுக்கு முன்பே, அணைக்கட்டுகள், ஏரிகள், குளங்கள் அவ்வளவாக இல்லாத போது மக்களின் வாழ்க்கை ஆற்றங்கரைகளிலேயே கழிந்தது. மக்கள் தொகை அதிகம் ஆகி மற்ற இடங்களிலும் வேளாண்மை செழிக்க நீர் நிலைகள் கட்டப் பட்டு, நீரைத் தேக்கி தேவைப் படும்போது உபயோகிக்கத் தொடங்கினார்கள்..



மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நீரின் தேவையும் அதிகரிக்கத்தானே செய்யும்? வாழ்க்கை முறைகளால் அதிகரித்த நீர்த் தேவையுடன், உலோக உற்பத்தி, இரசாயன உற்பத்தி இவற்றுக்கு நீரின் தேவை அதிகம் இருப்பதன் கூட, நீரில் கலக்கும் பூச்சி கொல்லிகள், மற்ற ரசாயனங்கள், இவை தவிர மக்கள் பண்ணும் அசுத்தங்கள் சொல்லி மாளாது.


இந்த அசுத்தப் படுத்தும் நடவடிக்கைகளை நாம் குறைத்துக் கொள்ளாவிட்டால், நம் சந்ததியினர் குடி தண்ணீருக்கு மட்டும் தம் நாளின் பெரும் பகுதியை செலவழிக்க நேரும்.


நமக்குத் தேவை : தண்ணீர் சிக்கனம், அசுத்தப் படுத்தாதிருத்தல், புதிய மற்றும் எல்லோராலும் பயன் படுத்தக் கூடிய சுத்திகரிப்பு & பாதுகாப்பு முறை.

நம்மைப் போன்று வீடுகளில் / அலுவலகங்களில் தண்ணீரை வீணாக்காமல் இருக்க சொட்டிக் கொண்டேயிருக்கும் குழாயை சரிப் படுத்துதல் முதல், குழாயை தொடர்ச்சியாக திறந்து வைத்துக் கொண்டு பல் துலக்குவது, பாத்திரம் தேய்ப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.


வாஷிங் மெஷினில் குறைந்த அளவு (minimum level) தண்ணீர் setting. குளிப்பதற்கு அதிக பட்சம் பதினைந்து லிட்டர் தண்ணீர் போதும்.


சொந்த வீடுகளில் குடியிருப்போர், ஓவர் ஹெட் டாங்க் நிரம்பி வழிந்து நீர் விரயமாவதைத் தடுக்க ஆட்டோமாடிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் பொருத்தலாம்.

மழை நீர் சேகரிப்பு என்ற அற்புதமான முறையை நாம் சரியாகப் பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஒரு முறை அது கட்டாயச் சட்டமாக்கப் பட்ட பொது ஏதோ அரசாங்கத்தை ஏமாற்றுவது போல நினைத்து மக்கள் அதை செய்யாமலேயும், அரை குறையாகச் செய்தும் சான்றிதழ் பெற்றது நினைவுக்கு வருகிறது.சரியாகப் பின்பற்றினால் பெரிய அளவு நன்மை பயக்கும் திட்டம் அது.

தண்ணீர்த் தேவை குறைந்த சமையல் முறைகள் - உதாரணமாக மைக்ரோவேவ் மற்றும் இண்டக்ஷன் குக்கர் உபயோகிக்கும் பொழுது

பாத்திரங்களில் கரி படிவதில்லை - அதனால் அதிகம் உபயோகப் படுத்தப் படும் TSP என்னும் ட்ரை சோடியம் பாஸ்பேட் உபயோகம் குறைகிறது.
அல்லது பாட்டி மாதிரி கரிப் பாத்திரம் என்று தனியே ஒன்றிருந்தால் அதன் கருப்பு நிறம் காரணமாக சூடு சீக்கிரம் பரவும்.

நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டு எல்லைக்குள் கடைபிடிக்கக் கூடிய முறைகளில் உங்களுக்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் அது பற்றி 'எங்களுக்கு' எழுதுங்களேன். தண்ணீர் தினம் என்ன, மாதம், வருடம் எல்லாமே கொண்டாடுவோமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக