திங்கள், 12 ஏப்ரல், 2010

மீண்டும் பழைய குப்பையா?

நாரதன் என்ற ஆணுக்கும், கிருஷ்ணன் என்ற ஆணுக்கும் பிறந்த அறுபது
குழந்தைகள்தாம் தமிழ்ப் புத்தாண்டுகள் என்ற அருவருப்பான ஆபாசக் கதையை
அடிப்படையாகக் கொண்ட சித்திரை முதல் நாளாகக் கொண்ட அந்தக் குழப்பத்துக்கு
இடமான கணக்கு முறையைத் தூக்கி எறிந்து, தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சியை
மய்யப்படுத்தி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மானமிகு
கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழ்நாடு சட்டப் பேரவையில்
ஒரு மனதாக சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் பிரபவ என்று தொடங்கும் அந்தப் பார்ப்பன ஆண்டு முறை என்பது
காலாவதியாகிப் போய்விட்ட ஒன்றாகும்.

ஆனால் பார்ப்பனர்கள் விடாப்பிடியாகவும், பார்ப்பனர்களுக்குத் துணை போகும்
சில தொங்கு சதைகளும் பழைய பத்தாம்பசலித்தனமான ஆண்டு முறையை நிலைநாட்டும்
வகையில் நடந்து கொள்வது சட்டவிரோதம் மட்டுமல்ல, தமிழர்களின் தன்மான
உணர்வுக்கும், மறுமலர்ச்சிக்கும் தடை போடும் அற்பத்தனமுமாகும்.

தமிழால் வயிறு வளர்த்துக் கொண்டு, அந்தத் தமிழையும், தமிழர்களையும்
கொச்சைப்படுத்தும் வகையில், பழைய சேற்றுக் குட்டையில் தமிழர்களை விழச்
செய்யும் வகையில் தமிழ் நாளேடுகள் சில விக்ருதி ஆண்டு ராசி பலன்கள் என்ற
பெயரில் இணைப்புகளை (supliments) வெளியிடுவது அசல் வெட்கக்கேடாகும். இந்த
ஏடுகளின் இத்தகைய போக்குகள் கண்டிக்கத்தக்கதும்,
வெட்கப்படத்தக்கதுமாகும்.

இதில் ஒரு வேடிக்கையும், விபரீதமும் என்னவென்றால், இந்த ஆண்டுப்
பிறப்பில் ஏதோ விஞ்ஞான உண்மைகள் இருப்பது போலவும், வான அறிவியல் கொஞ்சி
விளையாடுவது போலவும், வானியல் புறந்தள்ளிய குப்பைகளை முட்டாள்தனமாக
கூசாது எழுதித் தொலைக்கின்றன.

12 ராசிகளிலும் சூரியன் தங்கியிருக்கும் காலம்தான் ஒரு மாதம். சித்திரை
ஒன்றாந்தேதி சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும். தற்போது விரோதி ஆண்டு
முடிந்து விக்ருதி ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டில் சனி பகவான் மற்றும்
ராகு, கேது ஆகியோர் பெயர்ச்சி அடையவில்லை. சனிபகவான் ஆண்டு முழுவதும்
கன்னி ராசியிலும், ராகு தனுசிலும், கேது மிதுனத்திலும் இருக்கிறார்கள்
என்றெல்லாம் தம் போக்கில் எழுதுகிறார்களே, அவர்களை நோக்கி அறிவியல்
வானியல் விடுக்கும் வினா இதுதான்:

கோள்களில் ராகு, கேது என்று இருக்கின்றனவா? எந்த வானியல் அறிவு இதனை
ஏற்றுக் கொண்டிருக்கிறது?

ராகு என்ற பாம்பும், கேது என்ற பாம்பும் சந்திரனை விழுங்குகின்றன
என்றெல்லாம் மனிதர்களுக்குத் தவறான முட்டாள்தனமானவற்றைச் சொல்லிக்
கொடுக்கலாமா? மோசடிக் குற்றத்தில் இவர்களைக் குற்றக்கூண்டில்
நிறுத்தவேண்டாமா?

சூரியன் என்பது நட்சத்திரம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் அதனைக்
கோளாகச் சித்திரிப்பவர்களுக்கு எந்த அளவுக்கு வானியல் அறிவு இருக்கிறது?

மக்களிடத்தில் பக்தி இருக்கிறது; பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால்,
புராணங்களின் பெயரால் கூறப்படுபவற்றைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்
கொள்வார்கள் என்ற ஒரு காரணத்தால் எந்தக் குப்பையையும் கொட்டி
பத்திரிகைகளாக்கி, பாமர மக்களின் பணத்தைப் பறிக்கும் வழிப்பறி அல்லாமல்
இது வேறு என்னவாம்?

விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் வளர்க்கவேண்டும். இது ஓர் அடிப்படைக்
கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதற்கு எதிராக மக்களை
மூடக் குழியில் தள்ளும் இந்த ஊடகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை
எடுப்பது தவறல்ல!

குற்றங்களில் மாபெரும் குற்றம் மக்களின் அறிவைத் திசை திருப்புவதாகும்.

தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்துச்
சீர்திருத்தத்தை அரசு ஏற்றுக் கொண்டு, சட்டமியற்றியதற்குப் பிறகு, பழைய
முறையில் எழுதினால் அது எப்படி தவறோ, குற்றமோ, அதேபோன்றதுதான் மக்களால்
தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றம் ஒருமித்த குரலில்
ஒரு சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்தவேண்டும் என்று ஆணை பிறப்பித்த பின்,
அதற்கு நேர் எதிரான ஒன்றைக் கடைபிடிக்கச் சொல்வது குற்றம்தான்.

தமிழ் உணர்வாளர்களும், பகுத்தறிவாளர்களும் இத்திசையில் மக்களைக்
குழப்பும் சக்திகளை அம்பலப்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

மூடத்தனத்தை வளர்க்காதே, மக்களின் முற்போக்குச் சிந்தனையை மழுங்கடிக்காதே
என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

" விடுதலை” தலையங்கம் 12-4-2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக