திங்கள், 12 ஏப்ரல், 2010

ராமநாமம்!

ராமநாமம்!

ராம நாமம் சொல்வோம்! தவறுகளைத் திருத்திக் கொள்வோம் என்று
பார்ப்பனர்களால் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள திருச்சி கல்யாணராமன்
கூறியதாக ஒரு பார்ப்பன ஏடு பிரஸ்தாபித்துள்ளது.

அத்வைகானந்த... எனத் தொடங்கும் ராம கவசம், அகத்திய மாமுனிவர் கூறுவதுபோல்
அமைந்துள்ளது. தினமும் காலையில் புளியதோரை, பால் பாயசம்,
நைவேத்தியத்துடன் இந்தக் கவசத்தை 45 நாள்கள் பாராயணம் செய்து வந்தால்
சர்வ காரிய சித்தியும், சகல மங்கலமும் பெறலாம்.

விசுவாசமித்திரருடன் இருந்தபோதும், அதன் பின்னர் 14 ஆண்டுகள் வனவாசம்
மேற்கொண்ட போதும், ஸ்ரீராமர் நீர் மோர் மற்றும் பானகம் மட்டுமே
அருந்தினாராம். அதனாலேயே ராம நவமியன்று நீர் மோரும், பானகமும் நிவேதனப்
பொருட்களாகப் படைக்கப்-படுகின்றன என்று இன்னொரு ஏடு எழுதுகிறது.

ராம நாமம் சொல்லி மற்றவர்கள் திருந்திக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும்.
முதலில் அந்த ராமனே தவறு இல்லாத உத்தமனாக வாழ்ந்தானா என்பதுதான்
கேள்விக்குறி.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதுமே!

தசரதனுக்குப் பிறகு நாடு பரதனுக்கு உரியது என்று இராமனுக்குத் தெரியும்.

கைகேயி வயிற்றில் பிறக்கின்ற மகனுக்கே முடிசூட்டுவதாகக் கைகேயி-யிக்கும்,
அவன் தந்தைக்கும் தசரதன் வாக்குறுதி கொடுத்-திருந்ததை ராமன் அறிவான்.
அந்த வாக்குறுதி தனக்குத் தெரியும் என்பதைச் சித்திரக் கூடத்தில்
பரதனிடம் பேசியபோது இராமன் தெரிவித்தான். (திரு. டி. அமிர்தலிங்க
அய்யரால் எழுதப்பட்ட Ramayana vimarsa p403).

இது நன்கு தெரிந்திருந்தும் பரதன் தன் பாட்டனார் வீட்டில் இருந்தபோது,
அவனுக்குத் தெரியாமல் தன் தந்தையார் தசரதன், தனக்குப் பட்டம் சூட்ட
முடிவு செய்ததை ஏற்றுக்கொண்டானே இத்தகைய ராமன்தான் வாய்மையாளனா? நற்குணம்
வாய்ந்தவனா?

இத்தகையவனை நினைத்தால் தவறுகளை எப்படி திருத்திக் கொள்ள முடியும்?

கடவுள் தான் உலகைப் படைத்தார் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, சிவன்
திருவாதிரை நட்சத்திரத்திலும், ராமன் நவமி திதியிலும், கிருஷ்ணன் அஷ்டமி
திதியிலும், விநாயகன் சதுர்த்தியிலும், சுப்பிரமணியன் விசாக
நட்சத்திரத்திலும் பிறந்தார்கள் என்பது எப்படி?

அப்படியானால், இந்தக் கடவுள் கந்தாயங்கள் பிறப்பதற்கு முன்பே உலகம் ஒன்று
இருந்திருக்கவேண்டும் என்று ஆகிவிடவில்லையா?

ராம நவமியில் புளியோதரை சாப்பிட்டு நீர் மோரும் பருகினால் நினைத்தது
நடக்கும் என்றால், ராம பாலத்தைக் காப்பாற்ற ராம பக்தர்கள் புளியோதரை
சாப்பிடுவதை யார் தடுத்தது? நீர்மோர் குடிப்பதற்குக் குறுக்கே
நின்றவர்கள் யார்?

ராமன் பாலத்தைக் காப்பாற்ற உச்சநீதிமன்றம் சென்ற சு.சாமியும், ஜெயலலிதா
அம்மையாரும் பதில் சொல்லட்டுமே, பார்க்கலாம்.

மயிலாடன் அவர்கள் 10-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக