புதன், 9 ஜூன், 2010

நீதிக்கட்சி தோன்றக் காரணமே பார்ப்பனர்கள்தான்!

நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் நீதிக்கட்சி வரலாறு நூல்களை வெளியிட, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. பெற்றுக்கொண்டார். தமிழர் தலைவர் கி. வீரமணி, நூலாசிரியர் க. திருநாவுக்கரசு, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தொ.மு.ச. தலைவர் செ. குப்புசாமி மற்றும் சிங்கார ரத்தினசபாபதி (சென்னை, 8.6.2010).
திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு தி.மு.க. தொழிலாளர் அணி மாத ஏடான உழைப்பாளி இதழில் 40 மாதங்கள் எழுதிய நீதிக்கட்சி வரலாறு தொடர் நீதிக்கட்சி வரலாறு என்ற பெயரில் இரு தொகுதிகளாக, நூலாக வெளிவந்துள்ளன. 1078 பக்கங்களைக் கொண்ட இந்த இரு தொகுதிகள் நக்கீரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1200 விலையுள்ள இந்த இரு தொகுதிகளும், வெளியீட்டு விழா நடைபெற்ற நேற்று (8.6.2010) ரூபாய் ஓராயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நூலுக்கு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர், நிதியமைச்சர் மானமிகு மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி ஆகியோர் அணிந்துரைகளை வெகுசிறப்புடன் அளித்துள்ளனர்.

நீதிக்கட்சி _ அது தோன்றுவதற்குரிய சூழல் தொடங்கி, நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்றதுவரை (1944) 108 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.

திராவிட இயக்கத் தலைவர்களின் அரிய படங்கள், அறிக்கைகள், நீதிக்கட்சியின் சட்ட திட்டங்கள், தலைவர்களின் முக்கிய உரைகள் பிற்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழர் இல்லத்து நூலக அலமாரியில் இடம்-பெறவேண்டிய வைப்பு நிதி என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களால் அணிந்துரை வழங்கப்பட்ட இந்த இரு தொகுதிகளின் வெளியீட்டு விழா சென்னை பாவாணர் நூலகக் கட்டடத்தில் நேற்று மாலை (8.6.2010) 7 மணிக்கு நடைபெற்றது.

சென்னையில் மய்யப் பகுதியில் குளிரூட்டப்பட்ட அருமையான இந்த அரங்கம் இதுபோன்ற அறிவு சான்ற விழாக்களுக்கு வெகு பொருத்தமானதாகும்.

மாலை 6 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்தது. பல்துறைப் பெருமக்கள் சங்கமித்தனர்.

நிகழ்ச்சிக்கு தொ.மு.ச. தலைவர் மக்களவை முன்-னாள் உறுப்பினர் செ. குப்புசாமி தலைமை வகித்தார். அவர்தன் உரையில் சுயமரியாதை உணர்வும், இனமான உணர்வும் நம் மக்களிடம் வளர்ந்திட இந்த இரு நூல்களையும் படிக்கவேண்டும் என்று கேட்டுக்-கொண்டார். தொடக்கத்தில் தொ.மு.ச. பொதுச்-செயலாளர் மு. சண்முகம் வரவேற்புரை வழங்கினார்.

தொ.மு.ச.வின் உழைப்பாளி இதழில் வெளிவந்த கட்டுரைகள் இரு தொகுதிகளாக வெளிவருவது எங்-களுக்குக் கிடைத்த பெருமை என்றார் வரவேற்புரை ஆற்றிய தோழர் மு. சண்முகம்.

தொ.மு.ச. செயலாளர் பேரூர் நடராசன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

தொ.மு.ச. பொருளாளர் சிங்கார ரத்தின சபாபதி வாழ்த்திப் பேசினார்.

திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு

நூலாசிரியர் க. திருநாவுக்கரசு தமது உரையில் திராவிட இயக்க வரலாறு மொத்தம் பத்து தொகுதி-களாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும், இப்பொழுது முதற்கட்டமாக இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நூலாசிரியர் திருநாவுக்கரசு அவர்களுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நிதி அமைச்சருமான பேராசிரியர் பொன்னாடை அணிவித்தார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களும் ஆடை போர்த்திப் பாராட்டினார். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்-தவர்கள் சால்வைகளையும், கைத்தறி ஆடை-களையும் அணிவித்து தத்தம் அன்பினைப் பொழிந்தனர்.

நூல்கள் வெளியீடு

இரு தொகுதிகளையும் மாண்புமிகு நிதியமைச்சர் க. அன்பழகன் வெளியிட வடசென்னை மக்களவை உறுப்பினரும், தி.மு.க. அமைப்புச் செயலாளருமான டி.கே.எஸ். இளங்கோவன் பணம் கொடுத்து முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.

ரூபாய் 800 அளித்து முன்பதிவு செய்து கொண்டவர்-களும், மற்றவர்களும் விழா மேடைக்கு வந்து பேரா-சிரியர் அவர்களிடம் பெற்றுக் கொண்டனர்.

டி.கே.எஸ். இளங்கோவன்

முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்ட டி.கே.எஸ். இளங்கோவன் தன்னுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

தி.மு.க. இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது என்றால், அதற்கு மூல வித்து நீதிக்கட்சியே! தேவதாசி முறை ஒழிப்பு, பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட சமூகப் பிள்ளைகளும் கட்டாயம் சேர்ப்பு, பேருந்துகளில் தாழ்த்-தப்-பட்டவர்களை அனுமதிக்கவில்லை என்றால், பேருந்து-களின் உரிமம் பறிப்பு, இந்து அறநிலைய சட்டம், இட ஒதுக்கீடு என்கிற அரிய சட்டங்களையும், திட்டங்களை-யும் கொண்டு வந்தது நீதிக்கட்சி ஆட்சியே என்று குறைந்த நேரத்தில் செறிவாகப் பல தகவல்களையும் எடுத்துக் கூறினார்.

பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்-செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் நூலினைத் திறனாய்வு செய்தார்.

எடுத்த எடுப்பிலேயே ஒரு கைதட்டல் அவருக்காகக் காத்திருந்தது. இங்குக் கூடியிருக்கும் அனைவரும் பார்ப்பனர் அல்லாத மக்களின் பிரதிநிதிகள் என்று சொன்னதுதான் அந்தக் கைதட்டலுக்குக் காரணமாகும்.

தமிழர்களுக்கு அரிய சொத்தினைக் கொடுத்ததற்காக நூலாசிரியருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

சுமக்கக் கூடாதா?

தொகுதிகள் இரண்டும் கனமானவைதான். சுமந்து செல்லுவதற்குக் கஷ்டம்தான் என்றாலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக இழிவைச் சுமந்து கிடந்த மக்கள் _ அந்த இழிவைத் துடைக்கும் உந்து சக்தியாக வெளி-வந்திருக்கும் இந்த இரு தொகுதிகளையும் சுமக்கக் கூடாதா என்ற நியாயமான வினாவையும் நயமாகத் தொடுத்தார்.

திராவிடரின் அறிவை அழிப்பதுதான் ஆரியம் தழைக்க வழி என்று வைதீகம் நினைத்தது _ செய்தது என்று பேராசிரியர் அவர்கள் அணிந்துரையில் குறிப்-பிட்டதைப் பீடிகையாகக் கொண்டு தன் திறனாய்வைத் தொடர்ந்தார் சுப.வீ.

இரு தொகுதிகளிலும் உள்ள சில பகுதிகளைச் சுவைபட எடுத்துக்காட்டவும் செய்தார்.

1938 இல் இந்தி எதிர்ப்பின் காரணமாக தந்தை பெரியார் கைது செய்யப்பட்டார். பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஏ.டி. பன்னீர்செல்வம் அதுபற்றிக் கருத்துக் கூறினார்.

பெரியாருக்குச் சிறையில் ஏதாவது நேர்ந்துவிட்டால், காங்கிரஸ் சர்க்காருக்குப் பெரிய அபகீர்த்தி வரும். அதற்குப் பயந்து கொண்டு விடுதலை செய்து-விட்டார்கள் என்று கூறினார் பன்னீர்செல்வம்.

அதற்கு ஆனந்தவிகடன் எழுதிய பதில் என்ன தெரியுமா? அபகீர்த்திக்குப் பயப்படுபவர்கள்தான் காங்-கிரஸ்காரர்கள். ஆனால், அபகீர்த்தியைப்பற்றிப் பயப்-படாத-வர்கள்தான் நீதிக்கட்சிக்காரர்கள். அவர்களுக்கு வேண்டியது எல்லாம் உத்தியோகம், பதவி, பட்டம், சம்பளம் இவ்வளவுதான் என்று ஆனந்தவிகடன் தலையங்கம் தீட்டியது எல்லாம் இந்நூலில் பதிவாகியுள்ளது. இதன்மூலம் அக்கால பார்ப்பனர்களின் மனப் போக்கைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நீதிக்கட்சி இந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்ததையும், அதனையொட்டி இப்பொழுது தி.மு.க. ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயில் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததையும் ஒப்பிட்டார் சுப.வீ.

சிதம்பரம் கோயிலில் ஆண்டு வருமானம் ரூ.37,199 என்றும், செலவு ரூ.37,000 என்றும், மீதி வெறும் ரூ.199 என்றும் நீதிமன்றத்திலேயே கணக்குக் கொடுத்தார்கள் அக்கோயில் தீட்சதர்கள். அக்கோயில் இந்து அறநிலை-யத் துறையின்கீழ் வந்ததும், வெறும் 14 மாதங்களிலேயே ரூபாய் 29 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது என்ற விவரத்தைப் பொருத்தமாகக் கூறினார்.

கலைஞர் இவ்வளவு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துகிறாரே_ இதற்கெல்லாம் வருவாய் எங்-கிருந்து கிடைக்கிறது என்று கேட்டால், இதுபோல்தான் கிடைக்கிறது (பலத்த கைதட்டல்) என்றார்.

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நீதிக்கட்சி கொண்டு வந்தபோது, சத்தியமூர்த்தி அய்யர் என்ன பேசினார் என்பதை_ இந்த நூலில் குறிப்பிடப்-பட்டுள்ளதை எடுத்துக்காட்டினார்.

ஜஸ்டீஸ் கட்சிக்காரர்கள் இதுவரை கல்வி, உத்தி-யோகத்தைப் பற்றித்தான் பேசி வந்தார்கள். இப்பொழுது கடவுள்மீதும், கை வைத்துவிட்டார்கள். இனியும் இவர்களை விட்டு வைக்கக் கூடாது என்று பேசினார்.

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்த பிரதம அமைச்சர் பனகல் அரசர் எவ்-வளவு லாவகமாக அதனைச் செய்தார் என்று நூலி-லிருந்து எடுத்துக்காட்டினார். கோபால்சாமி அய்யங்கார் என்ற பார்ப்பனரை சிறப்பு உறுப்பினராக (Expert Member) நியமித்துக் கொண்டுதான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதேபால, அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறை-வேற்றியவுடன், அதன் முதல் தலைவராக நியமிக்-கப்பட்டவரும் ஒரு பார்ப்பனரே _ உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சதாசிவ அய்யர்தான் அவர்.

(யானையைக் கொண்டு யானையைப் பிடிப்பது என்பது இதுதானோ!)

பனகல் அரசரைப்பற்றி பார்ப்பனர்கள் மகாமகா தந்திரசாலி என்று சொல்லுவார்கள் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

அது இதுதான் போலும்!

நீதிக்கட்சிக்காரர்கள் வெள்ளைக்காரர்களுக்கு விசுவாசிகளாக இருந்தனர் என்ற காங்கிரஸ் குற்றச்சாற்று. உண்மை என்னவென்றால், காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளைக்காரர்களுக்கு ராஜ விசுவாச தீர்மானம் நிறைவேற்றியது போன்ற தகவல்களையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை.

ஆதிதிராவிடர் என்று பெயர் மாற்றம், குறவர் மக்களுக்கு 22 சலுகைகள் போன்ற நீதிக்கட்சி ஆட்சி-யின் சாதனைப் பட்டியல் சுப.வீ. உரையில் இடம்-பெற்றிருந்தது.

இனமான பேராசிரியர் க. அன்பழகன்

தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு அரசு நிதித்துறை அமைச்சருமான மானமிகு மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் இறுதியாக ஆற்றிய உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

நூலாசிரியரின் முயற்சி என்பது பெரிய முயற்சி. தேடித்தேடி ஆதாரங்களைக் குவித்து நூல் உரு-வாக்கப்பட்டுள்ளது. வெறும் உரைகள்மூலம் விளங்கிக் கொள்ள முடியாது. படிப்பதன்மூலமாகத்தான் தெரிந்து-கொள்ள முடியும். திராவிட இயக்கத்துக்குக் காப்பு அரண் இந்நூல்.

யாருக்கு அய்யம் ஏற்பட்டாலும், புரிந்துகொள்ளவும், தெளிந்து கொள்ளவும் இந்நூல் பயன்படும்.

சமூகநீதிக்காகத் தோன்றியதுதான் நீதிக்கட்சி. அந்நாளில் வெள்ளைக்காரனை விரட்டத் தோன்றியது காங்கிரஸ் கட்சி.

கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதில் முன்னாள் நீதிபதி சங்கரன் நாயரும் கலந்துகொண்டார். காங்கிரஸ்காரரான சீனிவாசய்யரும் போயிருந்தார். மாநாடு முடிந்தது. சங்கரன் நாயரைப் பார்த்து சீனிவாசய்யர் சொன்னார்: சங்கரா நீ உன் பந்திக்குப் போ! நான் எங்கள் பிராமணன் பந்திக்குப் போகிறேன் என்றார். காங்கிரஸ் மாநாட்டிலே இப்படி ஒரு பேதமா? உறுத்தியது சங்கரன் நாயருக்கு.

சர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயர். பெரும் தனவந்தர். சென்னை மயிலாப்பூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு ரூ.500 நன்கொடையும் வழங்கி இருந்தார். அந்தக் காலத்தில் 500 ரூபாய் என்றால், இப்பொழுது ரூபாய் 5 லட்சத்துக்குச் சமம்.

புத்தி வந்தது தியாகராயருக்கு

கும்பாபிஷேகத்தன்று என்ன நடந்தது? சென்னை கார்ப்பரேஷனில் தியாகராயருக்கும் கீழே வேலை செய்யும் பார்ப்பனர்கள் விழா மேடைக்குச் சென்றார்கள். நானும் வரலாமா? என்று கேட்டார் தியாகராயர். நீங்கள் எல்லாம் வரக்கூடாது _ மீறி வந்தால் தோஷம் ஏற்பட்டுவிடும் என்றார்கள். அப்பொழுதுதான் முதன்முதலாகப் புத்தி வந்தது தியாகராயருக்கு.

டாக்டர் டி.எம். நாயர் மலையாள நாட்டைச் சேர்ந்த-வர். மாரவாட் மாதவநாயரான டி.எம். நாயர் மருத்துவத் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். பட்டம் பெற்ற-வுடன் சொந்த ஊருக்குச் சென்றார். அங்கிருந்த நம்-பூதிரிகள் நாயரைப் பார்த்துக் கேட்டனர்.

சூத்திரனாகிய நீ எல்லாம் வெளிநாடு சென்று படிக்கலாமோ? என்று கேட்டனர். உறுத்தியது டாக்டர் நாயருக்கு.

அப்பொழுதெல்லாம் சென்னையில் பார்ப்பனர்கள் நடத்தும் உணவு விடுதிகளில் பார்ப்பனர் அல்லாதார் முதலியார், பிள்ளை, செட்டியார் என்று எந்தப் பயலும் உள்ளே சென்று சாப்பிட முடியாது.

அந்த நேரத்தில்தான் டாக்டர் சி. நடேசனார் தமிழின மாணவர்களுக்காக விடுதி _ ஹாஸ்டல் ஒன்று ஏற்பாடு செய்தார்.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் கோயில்களில் பெண்களைப் பொட்டுக்கட்டிவிடும் தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு சென்றார்.

சத்தியமூர்த்தி அய்யர் போன்ற பார்ப்பனர்கள் எதிர்த்தனர். தேவதாசி முறை என்பது தெய்வகாரியம்; அதில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்று வாதாடினர்.

முத்துலட்சுமி அம்மையார்தான் பதிலடி கொடுத்தார் சட்டசபையில், அந்தத் தெய்வ காரியத்தை இதுவரை நாங்கள் செய்து வந்தோம்; இனிமேல் அந்தத் தெய்வ காரியத்தை உங்கள் குடும்பப் பெண்கள் செய்யட்டுமே! என்றார் (பலத்த கரவொலி) அடங்கிப் போனார்கள்.

குடந்தையிலே அரசு கல்லூரியில் பார்ப்பன மாணவர்-களுக்குத் தனித் தண்ணீர்ப் பானை. பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனித் தண்ணீர்ப் பானை. அதனை எதிர்த்துத் தோன்றியதுதான் திராவிடர் மாணவர் கழகம்.

சேரன்மாதேவியில் நடந்தது என்ன?

சேரன்மாதேவியில் காங்கிரஸ் சார்பில், அதன் நிதியில் குருகுலம் நடத்தப்பட்டது. வ.வே.சு. அய்யர்தான் அதன் நிருவாகி. பார்ப்பனர்களுக்குத் தனிப் பந்தி, முதல் பந்தி, பார்ப்பனர் அல்லாதாருக்கு வேறு பந்தி. ஏன் இந்தப் பேதம் என்று எதிர்த்துக் கேட்டார் பெரியார்.

இதுதான் அய்தீகம் என்றார் வ.வே.சு. அய்யர். பெரி-யாருக்குக் கோபம் வந்தது, இழுத்து மூடினார்.

1905 இல் நீதிபதி சங்கரன்நாயர் ஒரு கருத்தைச் சொன்னார். இந்தியாவில் ஜாதி ஏற்ற தாழ்வு இருக்-கிறது. மேநாடுகள்போல ஜனநாயக அரசாங்கத்தை நாம் நடத்த முடியாது. நாம் சுதந்திரம் பெறவும், அனு-பவிக்-கவும் தகுதி உள்ளவர்கள்தானா? என்ற கேள்வியை எழுப்பினார்.

ஹிந்து பத்திரிகை கண்டித்தது. ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் எழுதினார்கள்.

ஒரு நீதிபதியாக இருந்துகொண்டு சுதந்திரத்துக்கு விரோதமாகப் பேசலாமா? என்றெல்லாம் ஆத்திரம் பொங்க எழுதித் தீர்த்தார்கள்.

அப்பொழுது பாரதியாரும் ஒரு கடிதத்தை எழுதினார் இந்து ஏட்டுக்கு. இந்து ஏட்டில் அது வெளிவந்தது.

நீதிபதி சங்கரன் நாயர் அப்படி என்ன சொல்லி-விட்டார்? இங்கிலாந்து நாட்டில் செருப்புத் தைக்கும் ஒரு தொழிலாளி பிரதமராக வர முடியும்; இந்தியாவில் அந்த நிலை உண்டா?

சமஸ்கிருதம் படித்த ஒரு பார்ப்பனர் அல்லாதார் சங்கராச்சாரியாராக வர முடியுமா? என்று அந்தக் கடிதத்தில் பாரதியார் குறிப்பிட்டு இருந்தார்.

உண்மையைச் சொல்லப்போனால், நீதிக்கட்சியை உண்டாக்கக் காரணமாக இருந்தவர்களே பார்ப்பனர்கள்தான் (பலத்த கரவொலி!).

நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு ஆசிரியராக வந்தவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே.

38 ஆசிரியர்கள் அந்தப் பள்ளியில் பணியாற்றி-னார்கள் என்றால், இரண்டே இரண்டு பேர்கள்தான் பார்ப்பனர் அல்லாதார். ஒருவர் மேன்யுவல் டிராயிங் ஆசிரியர்; இன்னொருவர் தமிழாசிரியர்.

எங்கள் ஆசிரியர் வகுப்பிலேயே எப்படியெல்லாம் பேசுவார்? பார்ப்பன மாணவன் சரியாகப் படிக்கா-விட்டால், நீ ஒழுங்காகப் படிக்காவிட்டால், தர்ப்பைப் புல்லை எடுத்துக்கொண்டுதான் போகவேண்டும். அப்படிப் போகத்தான் உனக்கு ஆசையா? என்று கேட்பார்.

பார்ப்பனர் அல்லாத மாணவன் ஒழுங்காகப் படிக்காவிட்டால், மாடு மேய்க்கப் போகவேண்டியவன் எல்லாம் படிக்க ஆசைப்படலாமா? சுடுகாட்டில் வேலை செய்கிறவன் பிள்ளை படிக்க வந்தால், படிப்பும் சுடுகாட்டுக்குத்தான் போகும் என்று வெளிப்படை-யாகவே வகுப்பில் பேசுவார்கள்.

அப்படியெல்லாம் அவர்கள் பேசியதால்தான் நான் இந்த இயக்குத்துக்கு வந்தேன் (பலத்த ஆரவாரம்!).

சூத்திரன் என்று அப்பொழுதெல்லாம் வெளிப்-படையாக சொல்லுவார்கள். டாக்டர் படித்த பார்ப்-பான்கூட, எதிரே ஒரு சூத்திரன் வந்தால், ஏன் தள்ளிப் போகக்கூடாதா? உரசிக்கிட்டுத்தான் போகவேண்டுமா? என்று கேட்பார்.

இப்பொழுது சூத்திரன் என்று சொல்லத் தைரியம் உண்டா? இதுதான் நீதிக்கட்சியின், சுயமரியாதை இயக்கத்தின் சாதனை.

ஆனால், நம்ப ஆளு இதனை மறந்துவிட்டானே!

நாம் இன்று அமைச்சராக இருக்கலாம். நம் பதவிகள் மட்டும்தான் கண்களுக்குத் தெரிகிறது.

இந்த நிலை எல்லாம் எப்படி வந்தது? எப்பொழுது வந்தது? பட்டம் பெற்று இருக்கிறான். பெரிய பெரிய உத்தியோகங்களிலும் இருக்கிறான். இவை எல்லாம் எந்தப் பயலின் சொந்த யோக்கியதையில் வந்தது? (கைதட்டல்).

நீதிக்கட்சி போட்ட பிச்சையல்லவா இவை எல்லாம்? (பலத்த கைதட்டல்) என்று கூறினார் பேராசிரியர்.

இறுதியாக உழைப்பாளி இதழின் துணை ஆசிரியர் ஆ.சீ. அருணகிரி நன்றி கூறிட, இரவு 8.45 மணிக்கு நூல் வெளியீட்டு விழா நேர்த்தியாக நிறைவுற்றது.

பாராட்டு

ஒளி அச்சு_ டி. சீனிவாசன், ஓவியர் _ அலாய் சியஸ், நக்கீரன் பதிப்பகம் _ தி. சிற்றரசு ஆகியோர்க்கு நிதி அமைச்சர் பேராசிரியர் சால்வைகள் போர்த்திச் சிறப்பு செய்தார்.

மின்சாரம்

திங்கள், 7 ஜூன், 2010

வாழும் கலை ரவிசங்கரின் பின்னணி என்ன?

வாழும் கலை போதிக்கும் சிறீ ரவிசங்கர் என்பவர் பார்ப்பன ஊடகங்களால் தூக்கிப் பிடித்து நிறுத்தப்-படுகிறார். ஆசிரமவாசிகளின் அந்தரங்கங்கள் எல்லாம் ஆபாசமானதாகவும், அருவருப்பானதாகவும், மக்களைச் சுரண்டுவதாகவும், பொருள் குவிப்பதாகவும்தான் இருந்து வருகின்றன. அன்றாடம் வரும் தகவல்கள் எல்லாம் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ரமணரிஷி என்ற ஒருவர் திருவண்ணாமலையில் இருந்தார். ஆன்மிகத்தின் பெயரால் கோடி கோடியாக பணம் சம்பாதித்தார். கடைசியில் தன் அண்ணன் மகனுக்கு அந்தச் சொத்துகளை எழுதி வைத்தார். அது தொடர்பான வழக்கு நீதிமன்றம் சென்றது. துறவிக்கு_ - சந்நியாசம் வாங்கியவருக்கு அண்ணன் மகன் என்ற உறவெல்லாம் கிடையாதே என்று நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தபோது, நான் துறவியல்லவே! நான் எப்போது சந்நியாசம் வாங்கினேன்? என்று பல்டி அடித்தாரா இல்லையா?

பெரிய பெரிய ஆசிரமம் நடத்துபவர்கள் எல்லாம் பெங்களூருவை ஏன் தேடிச் செல்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வியாகும். அரசியல்வாதிகளாக அங்கு இருப்பவர்கள் பெரும்பாலோர் ஆன்மிகவாதி-களாக இருக்கிறார்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

யோகா என்று கூறப்படும் உடற்பயிற்சிக் கலையை ஆன்மிகக் குதிரையில் பூட்டி சவாரி செய்கிறார்கள் இந்த ஆசிரமவாசிகள். இடை இடையே வசீகரமான, ஆளை மயக்கும் உபந்நியாசங்கள்! அதில் ஏமாந்த சீட கோடிகள் இவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

இந்த ரவிசங்கரின் பூர்வோத்திரத்தை அறிந்தவர்கள் ஆசாமி ஏதோ வேடம் போடுகிறார் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஊரை விட்டு ஏன் ஓடிவந்தார் என்பதெல்லாம் அவருக்கு மரியாதையைச் சேர்க்கக்-கூடியதல்ல.

நித்தியானந்தா சாமியாருக்கு ஏற்பட்ட நெருக்-கடிக்குப் பிறகு இந்த சாமியார்களுக்கு எல்லாம் நெரி கட்டிவிட்டது. தங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர்.

பெங்களூருவில் உள்ள ரவிசங்கரை நோக்கி யாரோ சுட்டதாக ஒரு தகவல்! காவல்துறையின் புலன் விசாரணை ஒரு விதமாக இருக்கிறது; ரவிசங்கர் தரப்பில் வேறு வகையாகச் சொல்லப்படுகிறது.

ரவிசங்கர் சீடர்களுக்குள் பிரச்சினை இருக்கிறது. அதன் விளைவாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதாகக் காவல் துறை கூறுகிறது.

இதுபோல பல சாமியார்களுக்கும் ஏற்கனவே பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. புட்டபர்த்தியில் சாயிபாபாவைக் கொலை செய்வதற்குச் சீடர்கள் முயற்சித்த போது, அறைக்குள் ஓடிப்போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதால் உயிர் தப்பித்தார்.

அமிர்தானந்த மயி அம்மையாரை ஒரு சீடன் கத்தியால் குத்த முயன்ற நிகழ்ச்சியும் இந்த இடத்தில் நினைவு கூரத்தக்கதாகும். அதுபோல இப்பொழுது ரவிசங்கர் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

ரவிசங்கர் விஷயத்தில் வேறு சில கருத்துகளும் கூறப்படுகின்றன. ரவிசங்கருக்கு இப்பொழுது ஒய் பிரிவு பாதுகாப்புத்தான் அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆர்வக் கோளாறினால் அவருடைய சீடர்கள், பக்தர்கள் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் வெளிவந்துள்ளது.

(ஆண்டவனோடு அந்தரங்கத்தில் பேசுபவர்களுக்கு ஒய் பாதுகாப்பு, இசட் பாதுகாப்பு தேவையா?)

தன் மீது பக்தர்கள் மத்தியில் அனுதாபம் வரு-வதற்குக்கூட கில்லாடி சாமியார் இது போன்ற சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்கலாம். எது உண்மையோ அது வெளியில் கொண்டு வரப்-பட்டே தீர வேண்டும்! கெட்ட நோக்கத்தோடு துப்பாக்-கிச் சூடு நடந்திருந்தால், குற்றவாளி கண்டு பிடிக்கப்-பட்டு கண்டிப்பாகத் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.

அதே நேரத்தில் இந்தச் சாமியார்களின் அன்றாட வேலைகள் என்ன? அவர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளால் சமுதாயத்திற்கு நன்மையா? அல்லது தனி மனிதருக்கு நன்மையா? என்பதெல்லாம் அறிவியல் ரீதியில் ஆராயப்பட வேண்டும்.

இந்தச் சாமியார்களின் வேடத்தை நம்பும் மக்கள் தங்கள் ;பொருள்களை இழக்கிறார்கள், காலத்தைக் கரியாக்கு கிறார்கள். இந்த மனிதசக்தி நாசத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

மேலும் இவர்களுக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி குவிகின்றன? வரவுக்கான கணக்குகள் என்ன? வெளிநாடுகளில் கூட சொத்துகளைக் குவித்து உள்-ளார்களே, இது எப்படி சாத்தியம்? (சந்திரா சாமியார்கள் ஆயுத பேரம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆக-வில்லையா?)

சமுதாயத்தில் பல அவலங்கள் தலை தூக்குவதற்கு இந்தச் சாமியார் தொழில் கரணியாக இருப்பதால் இதன் பின்னணியைக் கண்டறிந்து தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியமாகிறது.

சாமியார்களால் சமுதாய முன்னேற்றத்திற்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ ஒன்றும் ஆகப் போவதில்லை; மாறாக மனித சக்தி பாழ்படுத்தப்படுகிறது. இது குற்றங்களிலேயே மாபெரும் குற்றமாகும். எனவே இவர்கள் மீது விசாரணைகள் அவசியம்தேவை! மத்திய மாநில அரசுகள் அலட்சியப்படுத்தக்கூடாது!

ராஜபக்சே திருத்தவே முடியாத ஒரு சிங்களத் தீவிரவாதி:


சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ பரபரப்பு

சிங்கப்பூர்: இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்-கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்-பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார். ‘Citizen Singapore: How To Build A Nation’ என்ற நூலில்தான் இவ்வாறு ராஜபக்சே குறித்து படு காட்டமாக கூறியுள்ளார் லீ.

அதில் சில பகுதிகள்...

இலங்கையில் சிங்களவர்கள் எப்-போது முதல் இருக்கிறார்களோ அப்-போதிலிருந்தே தமிழர்களும் இருக்-கின்றனர்.

தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது.

இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமி-ழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்-கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்-தவோ முடியாது என்று கூறியுள்ளார் லீ.

நூலாசிரியர் கேட்ட சில கேள்வி-களுக்கு லீ அளித்துள்ள பதில்கள்...

இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. மெஜாரிட்டியான சிங்கள-வர்கள், விடுதலைப் புலிகளை அழித்து-விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமி-ழர்களை வெல்லும் தகுதியும், துணிச்-சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்-களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இது-தான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முய-லுகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். இலங்கையில் இன்று நடந்துகொண்டிருப்பது அப்பட்ட-மான ஓர் இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடி-யாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்து-கொண்டிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, சிங்-களவர்களை விட தமிழர்களுக்குத்-தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதி-யானவர்கள் தமிழர்கள்தான். மலே-சியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்-ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்-களும் மிகக் கடுமை-யான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்-தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார் லீ.

இந்த நூலை முன்னணி பத்-திரிகையாளரும், லாஸ் ஏஞ்சல்-ஸைச் சேர்ந்தவருமான பேராசி-ரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழவே முடியாது, தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்பதை தனது கருத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக லீ வலி-யுறுத்தியுள்ளார் என்பது குறிப்-பிடத்தக்கது.

எனக்கு நீ வேண்டாம், தேவை-யில்-லாத சுமை என்று ஒரு நாள் மலேசியா, சிங்கப்பூரை தனியாக கழற்றி விட்டது. அப்போது நிலை குலைந்து போனார்கள் சிங்கப்பூர் மக்கள். ஆனால் அவர்களைத் தேற்றி, தனது தலைமையில் சிங்-கப்பூரை இன்று அட்டகாசமான பொருளாதார சக்தியாக மாற்றிய பெருமைக்குரியவர் லீ குவான் யூ என்பது குறிப்பிடத்தக்கது

பலே அரசு!

மயிலாடன்

கேள்வி: ஏராளமான கோயில்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறதே, பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகள் புதைகுழிக்குள் போய்விட்டதா?

- ச.ந. தர்மலிங்கம்,
சத்தியமங்கலம்

பதில்: புதிதாய்த் தோன்று-வது கோயில்கள் அல்ல; உண்டியல்கள். பெரியாரின் கொள்கைகள் புதை குழியில் போவதற்கானவை அல்ல. புதை குழியில் புதைய இருப்-பவர்களைக் காப்பாற்றுவ-தற்காக.

(குமுதம், 9.6.2010, பக்கம் 18, அரசு பதில்கள்)

பரவாயில்லையே, அரசு உருப்படியாக ஒரு பதிலை சித்திரம் செதுக்கியதுபோல பிசிறு இல்லாமல் கடைந்தெ-டுத்து வார்த்துக் கொடுத்துள்-ளாரே _ பலே, பலே! என்று பாராட்டவேண்டும்தான்!

கோயில்களில் உண்டியல் வைக்கக்கூடாது என்று ஒரு சட்டம் போடட்டும் _ முதலில் கோயில் அர்ச்சகனே கோயி-லுக்குப் போவானா என்பது-தான் முக்கிய கேள்வியாக இருக்கும்.

இந்து அறநிலையத்துறை சிதம்பரம் கோயிலுக்குள் உண்டியலை வைத்து, தன் கட்டுக்குள் அதனைக் கொண்டு வந்து விட்டது என்றவுடன், அந்தக் கோயில் தீட்சதப் பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள்? நமக்குக் கிடைக்காதது நாசமாகப் போகவேண்டும் என்ற பரந்த இதயத்தால் அந்த உண்டிய-லுக்குள் எண்ணெய்யையும், நெய்யை-யும் ஊற்றி ரூபாய் நோட்டு-களைப் பாழடித்-தார்களே _ அதன் பொருள் என்ன?

சாணக்கியனாகிய கவுடில்-யனின் திட்டப்படி கோயில்கள் என்பவை வருவாய்க்காக அரசன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது-தானே!

பக்தி என்பது ஒரு பிசி-னஸ் என்று சங்கராச்சாரியார் கூறவில்லையா? கொலை, கொள்ளை செய்யத் துணி-கிறவர்களில் அனேகப் பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்-தனை செய்துகொண்டு தப்பித்-துக் கொள்வதற்கு வழி தேடு-கிறார்கள். நாத்திகத்திற்கும் இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகிவிட்டது. பணமுடை அதிகரித்துள்ளது.

_இப்படி சொல்லியிருப்-பவர் யார் என்றால் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதிதான் (குமுதம், 12.9.1996)

உண்மை இவ்வாறு இருக்-கும்போது பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை புதை குழிக்குள் போய்விட்டது என்று கூறுவது அபத்தமே!

தங்கத்தாலேயே கோயில் முழுவதும் ஒருவர் கட்டுகிறார் என்றால், இதற்குப் பணம் கொடுத்தவர் பகவானா? மக்களைச் சுரண்டுவது, தவ-றான வகையிலே கறுப்பாக வந்தது இந்தப் பணம் என்-ப-தல்லாமல், வேறு என்னவாம்?

கடவுளின் பெயரால், பக்தியின் பெயரால் பாமர மக்கள் சுரண்டப்படுகிறார்கள்.

அப்பாவிப் பெண்கள் கோயில் கருவறைக்குள்ளேயே கற்பழிக்கப்படுகிறார்கள் (கர்ப்பக்கிரகம் என்றால், கர்ப்-பத்தை உண்டாக்கும் கிர-கமோ!) அந்தக் கடவுளும் அதனைப் பார்த்துக்கொண்டே கையாலாகாதவனாக இருக்-கிறான்.

பெரியார் கொள்கை தோற்-றது என்பதற்கு இதுதான் அடையாளமா? கோவில் விபச்சார விடுதி என்று காந்-தியார் சொன்னதும் நிரூபிக்-கப்பட்டு விட்டதே!

இந்தப் பக்திப் புதை குழியில் புதைய இருப்பவர்-களைக் காப்பதற்காகத்தான் பெரியார் கொள்கை என்று குமுதம் அரசு கூறியிருப்பது மிகமிகப் பிரமாதம்! (Million Dollar Answer).

பக்தி வேடம் போட்ட ஒரு பார்ப்பனப் பெருச்சாளி குமுதம் நிதியைப் பெரும் அளவுக்குச் சுரண்டியது!

அரசுவின் பதிலில் அனுபவமும் கைகோக்கிறது _ என்று நம்பலாம்!

நன்றி- www.viduthalai.com

ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்கு இலங்கை அரசு வழி செய்ய வலியுறுத்த வேண்டும்


நவீன சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ கூறுவதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!
சிங்களர்களும், தமிழர்களும் சேர்ந்து வாழவே முடியாது!
இனப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு இந்திய அரசின் சிவப்புக் கம்பள வரவேற்பா?
முதலமைச்சர் கலைஞர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் மிக முக்கியமானது - அவசியமானது




ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இன வெறியர் ராஜபக்சே இந்தியாவுக்கு வரும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமைக்கு வழி செய்ய ராஜபக்சேயை இந்தியப் பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கூறியதைச் சுட்டிக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தம் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

அறிக்கை வருமாறு:

இலங்கையில் தமிழினப் படுகொலையைக் கூச்ச-நாச்சமின்றி செய்த இலங்கை அதிபர் சிங்கள ராஜபக்சே டில்லி வருகிறாராம்!

2009 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முள்வேலி முகாம்-களில் உள்ள தமிழர்கள் அவரவர் இடத்திற்கு அனுப்பப்பட்டு, குடி அமர்த்தப்படுவார்கள் என்று அவர் கொடுத்த வாக்குறுதி காற்றில் பஞ்சாய்ப் பறந்துவிட்டது!

ஈழத் தமிழர்கள் வாழ்வு நாயினும் கேடாய் நலிவுற்ற நிலையில் உள்ளதை அறிந்து, இங்குள்ள உணர்ச்சி-யுள்ள தமிழர்கள் இரத்தக் கண்ணீர் வடிப்பதைத் தவிர வகையறியாது தவிக்கும் நிலை!

பாழாய்ப் போன தமிழ்நாட்டு அரசியல்!

பாழாய்ப் போன தமிழ்நாட்டுப் பதவி அரசியல், அனை-வரும் ஒன்றுபட்டு _ இப்பிரச்சினையில் ஒரே அணியில் நின்று குரல் கொடுப்பதைத் தடுத்து வருவ-தோடு, இன எதிரிகளுக்கு இது ஒரு வாய்ப்பாகவும் அமைந்துவிடுகிறது!

ராஜபக்சே நடத்திய இலங்கைப் போர் _ உண்மை-யில் விடுதலைப்புலிகளுக்கோ, தீவிரவாதத்திற்கோ எதிரானதாக நடத்தப்படவில்லை. அது ஈழத் தமிழர்-களை அழித்தொழிப்பதற்காகவே என்பதை, இப்பிரச்-சினையை நடுநிலைக் கண்ணோட்டத்தோடு, எவ்வித ஆசாபாசமும், மன ஒதுக்கீடும் இல்லாது பார்க்கும் மிகப்-பெரிய உலக நிருவாகிகளும், எழுத்தாளர்களும் எப்படி பார்க்கின்றனர் என்பதற்கு முக்கியமாக இரண்டு செய்திகள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூர் சிற்பி லீ குவான் யூவின் கணிப்பு

அ. சிங்கப்பூர் நாட்டினை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பலம் வாய்ந்ததொரு நாடாக ஆக்-கி-யுள்ள சிங்கப்பூரின் நவீன சிற்பி என்றழைக்-கப்படும் லீ குவான் யூ அவர்கள் _ அவர் இன்றும் அந்நாட்டின் மக்கள் செயல் கட்சித் தலைவர்; அத்துடன் அந்த அரசில் இடம்பெற்றுள்ள மூத்த மதியுரை அமைச்சர் (Senior Mentor Minister) _ வயதில் மூத்தவர் _ முதிர்ச்சியடைந்த ராஜதந்திரியும்கூட!

அவர் ‘‘Citizen Singapore: How to Build A Nation Conversations with’’ என்ற நூலில்,

1. சிங்கள அதிபர் ராஜபக்சே திருத்தப்படவே முடியாத ஒரு சிங்களத் தீவிரவாதி _ இலங்கையில்!

2. சிங்களவர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ, அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கிறார்கள்.

3. தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வ-தற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாகவே இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக அது இருக்கவே முடியாது!

தமிழர்கள் அடங்கிக் கிடக்கமாட்டார்கள்

4. இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன்-மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டு-விட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்! ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்கமாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள்.

5. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுகளை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவர் மனதை மாற்றவோ, திருத்தவோ முடியாது.

_ இதைவிட மிகவும் துல்லியமாக சிங்கள வெறிய-ரான இராஜபக்சேபற்றியும், அவர்தம் செயல், எண்ண ஓட்டம், இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் உள்ள நியாயங்களையும் எவரும் சொல்லிவிட முடியாது!

இவர் விடுதலைப்புலிகள் ஆதரவாளரோ, இனவெறி, மதவெறியை ஆதரிப்பவரோ அல்ல. தேர்ந்த அரசியல் ஞானி. அவர் கூற்று 100_க்கு 100 உண்மை!

ஓநாய் ஒருபோதும் சைவமாகிவிடாது என்பதை மிகவும் ஆணித்தரமாக இதன்மூலம் உணர்த்தவேண்டி-யவர்களுக்கு அவர் _ லீ _ உணர்த்தியுள்ளார்!

பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறுகிறார்

ஆ. அதுபோலவே, பிரபல எழுத்தாளரும், முற்-போக்குச் சிந்தனையாளருமான அருந்ததிராய் அவர்-கள், ஒரு பேட்டியில், இலங்கையில் திட்டமிட்டே தமிழர்-கள் அழிக்கப்பட்டார்கள். இலங்கைக்கு ஆதரவாக கார்ப்பரேட் கம்பெனிகள் _ ஆதிக்க சக்திகள் _ பெரும் முதலாளித்துவ நாடுகள் சக்திகள்தான் இத்தமிழர் அழிப்புப் போரையே நடத்தின; காரணம், அவர்களை அங்கு அழித்துவிட்டால், நமது இச்சைபோல அவர்களது நிலத்தை இவர்களது உடைமையாக்கி இந்த முதலாளித் திமிங்கிலங்கள் கொழுக்கலாம் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு என்ற ஒரு கருத்தை _ இதுவரை யாரும் சிந்திக்காத ஒரு தனிக் கோணத்தில் பார்த்துக் கூறியுள்ளார் அருந்ததிராய்!

இ. ஏற்கெனவே ராஜபக்சேவை யுத்தக் குற்றவாளி-யாக _ இனப் படுகொலைக்காக விசாரணை செய்ய-வேண்-டும் என்றார் அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன்.

இந்தியாவின் நிலைப்பாடு வெட்கப்படத்தக்கது

இவ்வளவு பொதுவான பேர்கள் சொன்னாலும், தொப்புள்கொடி உறவுள்ள தமிழர்களது வாக்குகளைப் பெற்று, தமிழர்களின் ஆதரவோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள இந்திய மத்திய அரசு, இப்பிரச்சினையில் ராஜபக்சே _ சிங்களவர்களுக்கு இதமாக நடந்துகொள்-வது கண்டு வெட்கம், வேதனை அடைவதோடு எரி-மலை சீறும் உள்ளத்தோடு உலகத் தமிழினம் உள்ளது.

மிகுந்த கவலையைத் தெரிவிக்கிறோம் (We express our grave concern) என்று அடிக்கடி மத்திய அரசு நாமாவளி பாடினால் போதுமா?

கடப்பாரையை விழுங்கிவிட்டு, சுக்குக் கஷாயம் குடித்தவர் கதை போன்றதல்லவா அதன் தற்போதைய அணுகுமுறை?

இனவெறியருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பா?

இனப்படுகொலை செய்து, கொடுத்த வாக்குறுதிப்படி நடக்காது, முள்வேலிக்குள் ஆடு, மாடுகளைவிடக் கேவல-மாக எம் தமிழ்ச் சகோதர சகோதரிகளை அடைத்து வைத்துள்ள இதயமற்ற ராஜபக்சேவுக்கு இங்கே சிவப்புக் கம்பள வரவேற்பா?

தமிழ்நாட்டு முதல்வர் அவர்கள் பிரதமருக்கு ராஜ-பக்சேவை நிர்ப்பந்தப்படுத்தி, தமிழர்களின் வாழ்வுரி-மைக்கு வழி செய்யச் சொல்லுங்கள் என்று எழுதியுள்-ளார்கள்!

ஒரு மாநில அரசு _ அது மத்தியில் அங்கம் வகிக்-கும் அரசானாலும்கூட, தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளைக் கருதியும், எடுத்தேன் கவிழ்த்-தேன் என்று எந்த நிலையையும் எடுத்துவிட முடியாது!

அப்படி எடுத்தால், இங்குள்ள ராஜபக்சேவின் உறவுக் கூட்டமான ஆரியக் கூட்டத்திற்குத்தான் அது அனுகூலமாக முடியும். இதை வெறும் உணர்ச்சிவயப்-பட்டு அணுகக்கூடிய பிரச்சினை அல்ல.

தி.மு.க. தலைமைச் செயற்குழுவில் தீர்மானம்

ஆளுங்கட்சியான தி.மு.க. அதன் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 30.5.2010 அன்று நடைபெற்ற-போதே, ஈழத் தமிழர்கள் மறு குடியேற்றம் _ முள்வேலி அகற்றல் _ அவர்களுக்கு நியாயமான அத்தனை அடிப்-படை உரிமைகளும் தரப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி, மன்மோகன்சிங் தலைமையில் உள்ள அரசு இதனை இலங்கை அதிபரிடம் வற்புறுத்திடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

நேற்று பிரதமர் அவர்களுக்கு நமது முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு முக்கிய கடிதம் வாயிலாக டில்லிக்கு வரும் ராஜபக்சேயிடம் இதுபற்றிப் பேசி ஆக்க ரீதியான ஒரு தீர்வை உருவாக்கவேண்டும் என்றும் வற்புறுத்தி அழுத்தம் கொடுத்துள்ளார்.

அதோடு நிற்காமல், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்-பினர்கள், அதன் தலைவர் மானமிகு டி.ஆர். பாலு அவர்-களது தலைமையில், பிரதமரைச் சந்தித்து இதனை ஒரு தீர்வு காண _ ஈழத் தமிழர் வாழ்வுரி-மையை அவர்-கள் பெற்று, சகல மனித உரிமைகளோடு வாழ்ந்-திட _ வகை செய்ய வலியுறுத்திட ஆணையிட்டுள்ளார்.

ஒரு மாநில அரசு _ அது மத்தியில், இடம்பெற்-றுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, எதையும் பாக்கி வைக்காமல் செய்திருப்பது அதற்குள்ள அக்கறை, கவலை, பொறுப்பு இவற்றைத் தெளிவாகக் காட்டுகிறது!

மத்திய அரசின் முன்னுரிமை எது?

கொக்கொக்க கூம்பும் பருவத்து என்ற குறள் மொழி அரசியலுக்கு அடிப்படையானதாகும். எனவே, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எடுத்துள்ள முயற்சியை வெற்றிகரமாக்கவேண்டியது இந்திய மத்திய அரசின் மாபெரும் முன்னுரிமையாகும். தமிழர்களின் பொறுமையை அளவுக்கு மீறி சோதிக்கவேண்டாம்.

ஞாயிறு, 6 ஜூன், 2010

இலங்கை இறுதிப் போரில் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்: 'ஜப்பான் டைம்ஸ்'



இலங்கையில் வன்னி பகுதியில் நடைபெற்ற இறுதிப் போரின் போது சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்று 'தி ஜப்பான் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளை போர் நடைபெற்ற பகுதிகளுக்கு அனுமதிக்காததால், கொல்லப்பட்ட மக்கள் குறித்து துல்லியமான எண்ணிக்கை தெரியாது என்றும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் அந்த தகவலை மேற்கொள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை அரசு தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முற்படாமல் இருப்பதால், அதனால் போர்முனை வெற்றியை தக்க வைக்க இயலாது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - தினமணி (05.06.10)

சனி, 5 ஜூன், 2010

யார்இந்தகேதன் தேசாய்?



கிடைத்த வாய்ப்பை எவ்வளவு சரியாக (மன்னிக்கவும், மோசமாக) பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு பயன்படுத்தியிருக்கிறார் கேதன் தேசாய். மருத்துவக் கல்லூரி அங்கீகாரம்தான் அவருக்கு பணம் காய்ச்சி மரமாக இருந்திருக்கிறது. அவரது பணம் கறக்கும் பாணியே அலாதியானது என்கிறார்கள் மருத்துவத் துறையாளர்கள்.

ஒரு மருத்துவக் கல்லூரிக்கான கட்டடம், இதர வசதிகள் செய்யப்பட்ட பிறகு, அதன் நிருவாகம், மருத்துவக் கவுன்சிலிடம் அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கும். அதன் பிறகு ஒரு குழுவை மருத்துவக் கவுன்சில், தொடர்புள்ள கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கும். அவர்களும் தீவிரமாக விசாரணை செய்துவிட்டு, அறிக்கை அனுப்புகிறோம் என்று கூறிவிட்டு சென்று விடுவார்கள்.

சில நாள்களில், அது சரியில்லை, இது முறையில்லை என்று ஏகப்பட்ட ஓட்டைகளைக் குறிப்பிட்டு அங்கீகாரம் தர முடியாது என்ற அறிக்கை மருத்துவக் கல்லூரி நிருவாகத்திற்கு அனுப்பப்படும்.

உடனே, நிருவாகம் பதறியடித்துக் கொண்டு கவுன்சிலிடம் பேசும். அடுத்த நொடியே சுறுசுறுப்படையும். கேதன் தேசாய், தனது இடைத் தரகரை நிருவாகத்திடம் பேசுவதற்காக அனுப்புவார். அவரும் பேச வேண்டியதைப் பேசித் திரும்புவார். இவ்வாறு பேசியதன் மூலமாக ஒரு கல்லூரிக்கு தலா ரூ.30 கோடி வரை கையூட்டு பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, நாடெங்குமுள்ள 200 தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து தலா 5 இடங்களைப் பெற்று, அவற்றையும் நல்ல விலைக்கு விற்றிருக்கிறார். இதன்மூலம் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு ஊழல் பணத்தை கேதன் தேசாய் குவித்திருக்கிறார்.

தேசாயின் ஊழல் சாம்ராஜ்யம் நாடெங்கும் பரவிக் கிடந்தது. இது அரசின் காதுகளுக்கும் எட்டிவிட, அவரை வளைத்துப் பிடிக்க சி.பி.அய். முடிவு செய்தது. இதற்காக தக்க சமயம் பார்த்து சி.பி.அய். காத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், பஞ்சாப்பைச் சேர்ந்த கியான்சா கர் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக ரூ.2 கோடி பணத்தை அம்மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஜே.பி. சிங், கன்வால்ஜித் ஆகியோர் தேசாயிடம் கொடுத்தனர். அப்போது, மறைந்திருந்த சி.பி.அய். காவல் துறையினர் கேதன் தேசாய், கையூட்டு கொடுத்த 2 மருத்துவர்கள், இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயலாளர் ஏ.ஆர்.என். சீதல்வாட் ஆகியோரைக் கைது செய்தனர்.

ஏற்கெனவே 2001 ஆம் ஆண்டில் 0.65 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருள்களைப் பெற்றது தொடர்பாக தேசாய்மீது குற்றம் சாற்றப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.அய்.க்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கையும் தாண்டித்தான் மருத்துவக் கவுன்சிலின் தலைவர் பதவிக்கு தேசாய் வந்திருந்தார். இன்று அப்பதவியிலிருந்து தேசாய் விலகியிருந்தாலும், குஜராத் பல்கலைக் கழகத்தின் நிருவாகக் குழு உறுப்பினராகத் தொடர்கிறார்.

இவரைப்பற்றி இன்னொரு முதன்மையான செய்தி _ பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு கல்லூரிகள், நிறுவனங்களில் கல்வி, வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டுக்காக அப்போதைய பிரதமர் திரு. வி.பி. சிங் சமூகநீதிக் கண்ணோட்டத்துடன் மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தபோது, அதற்கு எதிராக மாணவர்களைத் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தியவர் இவர். இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டால், தகுதியும், திறமையும் போய்விடும் என்று கூறிய கேதன் தேசாய் போன்றவர்கள் தகுதியும், திறமையும் இப்போது வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது.

- துரை,நன்றி: வளர்தொழில்,ஜூன் 2010

www.viduthalai.com